கடந்த 06.09.201 அன்று
எமைவிட்டுப்
பிரிந்து இறையடி
சேர்ந்த ஜூனைத் ஆசிரியர்
பற்றி அடியேனின் அனுதாப
வரிகள்
- மதியன்பன்
அன்பினால் எம்மை ஆளும்
ஆசானே..! ஜூனைத் நீங்கள்
இன்னமும் எங்கள் நெஞ்சில்
இனிதாக உள்ளீர்இ ஆனால்
கண்களால் கண்டு கொள்ள
காலமோ வைக்க வில்லை
உண்மையில் கதறு கின்றோம்
விஞ்ஞானப் பாடம் தன்னை
விருப்பமாய் மாண வர்க்கு
நெஞ்சாற சொல்லி வைப்பீர்
நிதானத்தை அள்ளி வைப்பீர்
கொஞ்சமும் அலுக்க மாட்டீர்
குடும்பமாய் சேர்ந்து நிற்பீர்
அஞ்சிட வேண்டாம் என்பீர்
அறிவுதான் ஜெயிக்கும் என்பீர்.
பல்வகைத் திறமை கொண்டு
பலரையும் கவர்ந்து கொண்டீர்
கல்விதான் மூச் சென்றாலும்
கலைதனை காதல் கொண்டீர்
நல்லவை எது வென்றாலும்
நயத்துடன் செய்து நின்றீர்
இல்லைதான் நீங்கள். ஆனால்
இதயத்தில் நிறைந்து உள்ளீர்.
எப்போதும் சிரித்த வதனம்
எளிமையாய் வாழும் போக்கு
ஒப்பனை இல்லா அன்பு
ஒருவரையும் நோகா பண்பு
இப்படி வாழ்ந்து மற்றோர்
இதயத்தை கொள்ளை கொண்ட
சிப்பியே ஆசான் உங்கள்
சிறப்புகள் நிறைய உண்டு.
விழுதுகள் விட்டுச் சென்ற
வினைதிறன் ஆசான் பற்றி
எழுதிட ஆசை அதிகம்
என்றாலும் முடிய வில்லை
அழுதுநாம் வேண்டு கின்றோம்
அல்லாஹ் உன் அடியார் பாவம்
முழுமையாய் மன்னித் தருள்வாய்
முடிவிலா சுவனம் தருவாய்
07.09.2017
இன்று (09/07/2016) காத்தான்குடியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் விசேட கவியரங்கில் "இப்தார் " எனும் தலைப்பில் அடியேன் பாடிய கவிதை. முழுமையாக ...
( முடியும் வரை கேட்ட பலர் பாராட்ட இன்னும் சிலர் முகம் சுழித்துக் கொண்டார்கள்)
- மதியன்பன் -
இறையருளைச்
சுமந்து வந்த இப்தார்
எமை விட்டுப் பிரிந்து போனது
அதனால்
உள்ளம் எரிந்து போனது
இப்தார்
இபாதத்தை மட்டுமல்ல
இனிமையையும்
இழுத்துக் கொண்டு வந்தது
ஆனால்
அலுத்துக் கொண்டு போனது
இப்தார் என்பது
எப்போதும் இனிமை தான்
அது
தனிமையைத் தாண்டி நிற்கும் போது
பிறை விவகாரத்தில்
பிளவுபட்டவர்கள் கூட
இப்தார் நிகழ்வுகளில்
இணைந்து கொண்டார்கள்
இதிலென்ன
ஒற்றுமை என்று சிலர்
ஒப்பாரியும் வைத்துக் கொண்டார்கள்
" கஞ்சி, சமுசா
களர்களராய் பாலுதா
கூடவே மாமியார்
இவையெல்லாம் இல்லையென்றால்
சிலருக்கு
நோன்பென்பதே நோக்காடு தான்
பெரும் வேக்காடு தான்
கஞ்சும், சமுகவும்
தேடித் தேடி
சில கணவன்மார்
நொந்து நூடில்சாகிப் போனார்கள்
என்னைப் போல...
பொரித்துப் பொரித்து
மிஞ்சிய எண்ணையில்
பொரித்தெடுத்த சமுசா
அளவில்லாமல்
அள்ளிப் போட்ட அஜினோமோட்டா
சுவையூட்டிய கஞ்சியை
சுவைத்தவர்களெல்லாம்
இப்போது
நெஞ்சு வலியால்
நிலை குலைந்து கிடக்கிறார்கள்
ஏறாவூர்ப் பெத்தா
எங்க வீட்டுக்கு
அவல் கொண்டு வருவார்
கஞ்சிக்கு நல்லதென்று
காரணமும் சொல்வார்
எங்க வீட்டுத் தெருக்களில்
சின்ன வாண்டுகள்
வண்டப்பம் விற்று வரும்
அவை
கூப்பிடும் குரலோசையில்
குயில்கள் கூட குழம்பிப் போகும்
மாலையானால்
சின்னவர்கள்
கஞ்சி வாங்க பள்ளிக்குப் போவார்கள்
அந்த நேரம்
அந்தி வானத்து அழகும்
அவர்களிடம் தோற்றுப் போகும்
சில நேரம்
இல்லையென்று திரும்புகையில்
இதயத்தில்
குண்டு வந்து பாயும்
பள்ளி வாயல் கஞ்சில்
பாகுபாடு என்று
பணிப் போரும் நடக்கும்
கஞ்சிக்கு வந்த கூட்டம்
அந்சிப் போய்
கவலையோடு காத்துக் கிடக்கும்
இப்படி
இப்தாரின் இனிமையெல்லாம்
இப்போது
இல்லாமல் போனது
ஏழைகள்
இணைந்து கொண்ட இப்தாரை
பள்ளிகளில் மாத்திரம் தான்
பார்க்க முடிந்தது
அவர் பசியை போக்க முடிந்தது
இப்தாரை
இன்று சிலர்
பரவலாக்கி பதிவிட்டிருக்கிறார்கள்
இன்னும் சிலர்
நரகலாக்கி நாசமாக்கியிருக்கிறார்கள்
இப்தாரின் இலட்சியமே
இப்போது
அலட்சியமாகிப் போனது
வேடிக்கை வினோத கேளிக்கை நிகழ்ச்சி போல்
சோடிக்கப்பட்டிருக்கிறது
அவை
சடங்குகளாய் முடங்கிப் போனது
பெருமை
பல மடங்காகிப் போனது
மொத்தத்தில்
இறைவனின் அருளே இல்லாமல் போனது
பிற மத இப்தார்களில்
நம்மவர்கள்
பிரியமுடன் கலந்து கொண்டு
நக்குண்டு நாவிழந்து வருகிறார்கள்
ஒற்றுமை, சமத்துவம் ஒருமைப்பாடு
வேற்றுமை களைதல்
இப்படி
வேறு பல காரணங்கள்
இதில் ஒற்றுமை கிடைக்கும்
ஆனால்
ஒப்பற்ற இப்தாரின்
உயர் நன்மை கிடைக்குமா"?
இஸ்லாமியப் பொருளாதாரம்
இங்கும், அங்குமாய்
வீணே
வீசியெறியப் படுகிறது
சிரியா, சோமாலியா, எத்தியோபியா
இங்கெல்லாம்
சர்வதேச உம்மத்துக்கள்
சஹருக்கும் , இப்தாருக்கும்
சதாவும் கையேந்தி நிற்கிறார்கள்
ஆனால்
அரபு நாடுகளோ.
அநியாயமாய்
அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இதிலெப்படி
இறையருள் இறங்கப் போகிறது
வட்டி வங்கிகளிலும்
இப்போது இனிய இப்தார் ஏற்பாடு
நம்மவர்கள் தான்
முட்டி மோதிக் கொண்டு
முன்னுக்கு நிற்கிறார்கள்
போதாக்குறைக்கு
உலமாக்களின் உபநியாசம் வேறு
இதிலெப்படி
இறையருள் இறங்கப் போகிறது
மைத்திரி, ரணில், மஹிந்த
இப்படி
அரசியல் தலைவர்களின் ஐக்கிய இப்தார் வேறு
இங்கெல்யாம்
முன் வரிசையில் உட்கார்ந்து
மூக்கு முட்டத் திண்டு
முறுக்கேறி வருபவர்கள் நம்ம முல்லாக்கள் தான்
இதிலெப்படி
இறையருள் இறங்கப் போகிறது
வறியவர்களை அழைத்து
இப்தார் செய்யக் சொன்னார்கள் இறைத்தூதர்
இப்போதெல்லாம்
ஊரில்
பெரியவர்களை அழைத்து
இப்தார் செய்வதே பெசனாக மாறியிருக்கிறது
இன ஒற்றுமைக்கு
எடுத்துக் காட்டல்ல இப்தார்
அது
இறைவனோடு பேசுகின்ற நேரம்
இதனை
ஒரமாக்கி தூரமாக்கியிருக்கிறோம்
இதிலெப்படி
இறையருள் இறங்கப் போகிறது
கலிமா
தொழுகை, நோன்பு
ஸக்காத், ஹஜ்
இவையெல்லாம் இஸ்லாத்தில் கடமை
இப்தாருக்குள் மட்டும்
ஏனிந்த மடமை ...?
வருங்காலத்திலாவது
மடமைகளை ஒழிப்போம்
மார்க்கத்தின்
கடமைகளை மதிப்போம்
நன்றியுடன் - மதியன்பன் -