19 March 2014

இன்னுமொரு தேர்தல் வராமலா போகும்..?


மதியன்பன்


கொட்டபபட்ட
கொங்ரீட் கற்களாய்
குவிந்து கிடக்கிறது சனம்

காணாமல் போன
மலேசியா விமானம் போல்
எல்லோரும்
தலைவரின் வருகைக்காய்
தவமிருந்தார்கள்


பீரங்கிப் பேச்சாளர்
தலைவரின் வருகை பற்றி
தகவல் சொன்னதும்
தலைகளெல்லாம்
அலைகளாய் உயர்ந்தன.

தக்பீர் முழங்க
மாலை மரியாதையுடன்
மேடைக்கு வந்தார்
மானசீகத் தலைவர்.

போராளிகளே..! புறப்படுங்கள்..
நாங்கள்தான்
ஆட்சியை ஆக்குவதும் அழிப்பதும்
எம்மினத்தின் தீர்வு
எங்களை
வெல்லவைப்பதில் மாத்திரமே..

தலைவரின் உரையில்
தனல் தெறித்தது.
தக்பீர் முழக்கம் வான் பிழந்தது.

வழமைபோல்
மக்கள் மந்தைகளாகினர்.
சிந்தனைக்கு
சிறிதேனும் இடம் கொடுக்கவில்லை.

பள்ளி உடைப்பு பர்தா களைவு
ஹலால் எதிர்ப்பு
இப்படி
எல்லாமே மறந்து போயின..

எம் சனம்
வாக்களிப்பதாய் வாக்களித்தது
தலைவரிடம்
பைஅத்தும் செய்து கொண்டது.

தேர்தல் வரும்
அப்போது
திரண்டு சென்று
அக்கறையோடு வாக்களிப்பார்கள்
அவர்களை
வெல்லவைப்பார்கள்
போதாக்குறைக்கு
வாழவும் வைப்பார்கள்

அடுத்த தேர்தல் வரை
இவர்கள்
அடிமைகளாய் அனாதைகளாய்
வாழந்தும் தொலைப்பார்கள்

சமூகம் ஏமாறவும்
தலைவர்கள் ஏமாற்றவும்
இன்னுமொரு தேர்தல்
வராமலா போகும்...?
;



No comments:

Post a Comment