சிறுகதை

வாங்க ராத்தா ஊருக்குப் போகலாம்....!


- மதியன்பன்


'பாத்திமா..! எழும்புங்க மகள். தங்கச்சியையும் எழுப்பிடுங்க.. மூணு மணியாகுது, நான் சோறு கறிய சூடாக்கிறன் நீங்க தொழுதுட்டு ரெடியாவுங்க சஹர் செய்திட்டு அஞ்சு மணி பஸ்ஸூக்கு போகணும்.' 


தன் அன்புச் செல்வங்கள் இரண்டையும் எழுப்பிவிட்டு குசினிக்குள் நுழைந்தாள் ஆயிசா.


ஆயிசாவின் வீடு அவ்வளவு ஒன்றும் அறுக்கையானதோ வசதியானதோ அல்ல. பொலித்தீனாலும் ஓலையாலும் வேயப்பட்ட கூரையைக் கொண்டது. இவ்வளவு வசதியான காலத்திலும் இப்படியொரு குடியிருப்பு வாழ்க்கையா என்று சொல்லுமளவுக்கு எளிமையானது. குளிப்பதற்கும் இயற்கையை போக்கிக் கொள்வதற்கும் கொல்லைப் புறத்தை நாடவேண்டிய சூழ்நிலை. 


என்றாலும் ஆயிசாவின் கணவர் அப்துல் காதர் இருந்த போது அந்த வீட்டில் இருந்த நிம்மதியும் நிறைவும் இப்போது இல்லை யென்பதை ஆயிசாவின் கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீர் தெளிவு படுத்தியது.


2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப் பேரலையில் சிக்குண்டு உயிர் நீத்தவர்தான் அப்துல் காதர். அவருக்கு மூன்று பிள்ளைகள்;. இரண்டு பெண்கள் ஒன்று ஆண். அந்த ஆண்பிள்ளை அவர் உயிரோடு இருக்கும் போது பயங்கர வாதிகளால் கடத்தப்பட்டு சஹீதாக்கப்பட்டவர்.


கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதே அப்துல் காதருக்கு தொழிலாக இருந்தது. அவருக்கு உதவியாக அவரது மகன் சலீம் இருந்த போது தன்னுடைய பிள்ளைகள் மூன்றையும் எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும். தன்னோடு இந்தத் தொழில் முடிந்து விட வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறு முன்னரே மகன் கடத்தி கொல்லப்பட்ட செய்தி அவரை ரொம்பவும் பாதித்து விட்டது. என்றாலும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவரை விட்டுப் போகவில்லை. ஒரு இலட்சிய வேட்கையோடு உடலும் உள்ளமும் நொந்து போன நிலையிலும் அவர் கடற் தொழிலையே தன்னுடைய ஜீவியமாக ஏற்றுக்கொண்டார்.


அவருக்கு அதுவும் நீடிக்கவில்லை சுனாமி அவரையும் சேர்த்து சுருட்டிக் கொண்டு போய்விட்டது. ஆயிசா விதவையாகவும் அவரது இரண்டு பிள்ளைகள் அனாதைகளாகவும் சமூகத்தில் அறிமுகமானார்கள். மனம் தளரவில்லை ஆயிசா. கணவனின் இலட்சியத்தை தலைமேல் சுமந்து கொண்டாள் அவள்.


விதவையாக்கப்பட்டு சமூகத்தினால் கண்டு கொள்ளப்படாத பெண்கள் செய்கின்ற இடியப்பம் அவித்தல், பாய் பின்னுதல், வீட்டு வேலைகளுக்குச் செல்லுதல் என்று கிடைக்கின்ற எந்த வேலையையும் அலுப்பில்லாமல் செய்து தன்னுடைய பிள்ளைகளையும் படிப்பித்துக் கொண்டிருந்த ஆயிசாவுக்கு தன்னுடைய மூத்த மகளை யாருக்காவது திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்ற கவலையும் மிக நீண்ட நாட்களாக இருந்து வந்தது.


அந்தக் கவலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் தலை நோன்புக்கு வீட்டுக்கு வந்த பாத்துமா சாச்சி சொன்ன வார்த்தைகள் ஆயிசாவை கொஞ்சம் சிந்திக்க வைத்தது.


'புள்ள ஆயிசா, நீ இப்புடி ஊருக்க கிடந்தியெண்டா ஒண்ட குமரு முத்தி குரங்கான கதையாப் போயிடும் மறுகா யாருக்கும் கட்டிக் கொடுக்க முடியாம கஸ்டப்பட்டுப் போவாய். நான் வருசா வருசம் நோன்புக்குள்ள கொழும்புக்கு போய் சக்காத் வாங்கிட்டு வார. இருபத்தியேழாம் கிழமை நிறையக் காசி கிடைக்கும். நான் ஆறு வருசமா போய் காசு சேத்துத்;தான் என்ட புள்ளைக்கும் கல்யாணம் முடிச்சுக் கொடுத்த... நீயும் உண்ட புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு என்னோட வா மத்ததையெல்லாம் நான் பாத்துக்கிறன்'


பாத்துமா சாச்சியின் கருத்தில் உடன்பாடு கொண்ட ஆயிசா பயண ஏற்பாடுகளை முடித்து விட்டுத்தான் சஹர் நேர சாப்பாட்டுக்கு ஆயத்தம் செய்தாள்.


இரண்டு நாட்களாக சூடாக்கி சூடாக்கி வைத்திருந்த சோறும் கறியும் மூவருமாகச் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு சுபஹiயும் தொழுதுவிட்டு பயணத்தை ஆரம்பித்தார்கள். கொழும்புக்கான பயணத்தில் இவர்களோடு பாத்துமா சாச்சியும் இவர்களைப்போல் இன்னும் பலரும் இணைந்து கொண்டார்கள்.


தலை நகர் கொழும்பு ரொம்பவும் பரபரப்பாக காணப்பட்டது. பாத்துமா சாச்சியின் வழி காட்டலில் ஆயிசாவும் அவரது இரண்டு பிள்ளைகளும் இழுபட்டுச் சென்றார்கள். 


'இந்த குமருப் புள்ளைக்கி கல்யாணம் முடிச்சுக் கொடுக்கணும் ஊடு கட்டணும். உதவுங்க ஹாஜி. அல்லாஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வான்.' என்ற வார்த்தைகளை மூல மந்திரமாகக் கொண்டு ஆயிசாவின் மூத்த புள்ள பாத்திமாவை முன்னிறுத்தி கைநீட்டும் படலம் கடைகடையாக ஆரம்பமானது.


நல்ல உள்ளம் படைத்தவர்கள் அள்ளியள்ளிக் கொடுத்தார்கள். இன்னும் சிலர் துரத்தியடித்தார்கள். பிறகு வாருங்கள் என்று இன்னும் சிலர் கதையளந்தார்கள்.


பெரிய பள்ளிவாயல் முன்றலில் யாரோ ஒருவர் கொடுத்த கஞ்சி சமுசாவோடு நோன்பைத் துறந்த அவர்கள் மீண்டும் கடைகடையாக ஏறி கையேந்தினார்கள். கடைகள் மூடமூட ஆயிசாவுக்கு கவலை ஆரம்பித்தது. கை நிறையக் காசு என்றாலும் எங்கே படுப்பது குமருப்புள்ளைகளை எப்படிப் பாதுகாப்பது..?


பாத்துமா சாச்சி தைரியமூட்டினார். 'இஞ்;ச பாருபுள்ள ஆயிசா, ஒண்டுக்கும் கவலப்படாத நம்மள போல நிறையப்பேரு கொழும்புக்கு வந்திருக்காங்க. அவங்களும் கைப்பிள்ளைகள், குமருப்புள்ளைகள் என்று கூட்டிக்கிட்டுத்தான் வந்திருக்காங்க.. எல்லாரும் றோட்டு ஓரத்தில கடை படிக்கட்டிலதான் படுப்பாங்க.. லைட்டு வெளிச்சம் இருக்கு ஒண்ணுக்கும் பயமில்ல. நாமளும் படுப்பம் இன்னும் ரெண்டு நாள் பார்த்திட்டு போயிடலாம். வாங்க கடையில ரொட்டி வாங்கி சாப்பிடுவோம்' 


நால்வருமாக சாப்பிட்டுவிட்டு பள்ளிவாயல் அருகிலுள்ள கடை படிக்கட்டொன்றில் பெற்சீட்டை விரித்துக் கொண்டு தூங்காமல் தூங்கினார்கள்.


மறுநாள் காலை விடிந்தது. எல்லாவற்றையும் சுருட்டி எடுத்துக் கொண்டு படுத்தவர்கள் பல்வேறு திசைகளுக்கு பயணமானார்கள். என்றாலும் சனக்கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 


இன்று இருபத்தி ஏழாம் கிழமையாம் நிறைய சக்காத் கொடுப்பாங்களாம் என்ற தகவல் மிக வேகமாக பரவிக் கொண்டிருந்தது. பார்க்கின்ற பக்கமெல்லாம் தொப்பி. பர்தா, அபாயா, சல்வார் எப்போது கடை திறப்பார்கள் என்ற ஏக்கத்தோடு காத்துக் கொண்டு நின்றார்கள்.


அரபா மைதானம் போல் சனக்கூட்டம். நடக்க முடியாத அளவுக்கு வீதியெல்லாம் நிறைந்து காணப்பட்டது. அத்தனையும் சக்காத் வாங்கவந்த கூட்டமாம் ஆளுக்காள் கதைத்துக் கொண்டார்கள். பிற சமூகம் வேடிக்கையாக நக்கலாக ஏதேதோ பேசிக் கொண்டு போனது. கடைகள் திறக்க மீண்டும் கைநீட்டல் ஆரம்பமானது


ஊரவிட்டு வந்ததற்கு பரவாயில்லை அடுத்த வருசமும் வரத்தான் வேண்டும் என்று கைகளில் இருந்த பணத்தை வைத்து கணக்குப் போட்டுக் கொண்டாள் ஆயிசா. அப்போதுதான் மர்சூக் மாமா வருவதை இளைய மகள் சுலைஹா சுட்டிக்காட்டினாள்.


மர்சூக், ஆயிசாவின் பக்கத்து வீட்டுக்காரர். கொழும்பிலே தொழில் செய்தாலும் ஊரோடு நிறைய தொடர்புடையவர். இவரைக் கண்டதும் ஆயிசா ஒளிந்து கொள்ள முயற்சித்தாள் அதற்குள் மர்சூக் அவளைக் கண்டு கொண்டார். ஆயிசா தன்னுடைய நிலைமைகளை விலாவாரியாhக எடுத்துச் சொன்னபோது அத்தனையையும் அமைதியாக உள்வாங்கிக் கொண்டான் மர்சூக்.


'ராத்தா இண்டைக்கி குடும்பத்தோட நான் ஊருக்குப் போறன். வாங்க என்னோட ஊருக்கு போகலாம் உங்களைப்போல றோட்டுறோட்டா கடைகடையா அலைகிறவங்களுக்கு அல்லாஹ் நல்லதொரு வழியை வச்சிருக்கான்; என்று சொன்னவர் அவர்களையும் தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தன் குடும்பத்தோடு ஊருக்கு பயணமானான்.


வாகனம் ஓடிக் கொண்டிருந்தது. மர்சூக் பேசத் தொடங்கினான். 


'ராத்தா, உங்களுக்குத் தெரியும்தானே நான் எவ்வளவு கஸ்டப்பட்டவன் என்று. தொழில் இல்லாமல் கஸ்டப்பட்டு வட்டிக்கு பணம் எடுத்து அதிலயும் நஸ்டப்பட்டு ஊரவிட்டு ஓடின எனக்கு உதவி செய்தது நம்முட ஊரு சம்மேளனம்தான். அவங்க செய்த உதவியாலதான் நான் இப்ப ரொம்ப நல்ல நிலையில இருக்கன். கொழும்பில ஒரு கடையையும் வச்சிருக்கன். சக்காத் கொடுக்கக்கூடிய வசதியையும் அல்லாஹ் எனக்குத் தந்திருக்கான். கொழும்பில எண்ட தலைமையிலதான் ஒரு குழு சக்காத் பணம் சேர்த்திருக்கோம். அத கொடுக்கத்தான் இப்ப நான் ஊருக்கு போறன். 


நம்முடைய சமூகத்தில ஆம்புளைகளும் பொம்புளைகளும் குமருகளும் குட்டிகளும் இனிமேலும் றோட்டு றோட்டா கடை கடையா அலையக்கூடாது இதற்கு முன்னோடியாத்தான் காத்தான்குடியில சம்மேளனம் கூட்டு சக்காத்தை ஆரம்பிச்சி பலவருடமா சிறப்பாக செய்து வாறாங்க. அதில நிறையப்பேரு நன்மையும் அடைஞ்சிருக்காங்க..


அதனோட சேர்த்து பல்வேறு வேலைத் திட்டங்களையும் அவங்க அமுல்படுத்தி வாறாங்க.. புதிதாக இஸ்லாத்திற்கு வாறவங்களுக்கு உதவுதல், நோய் நிவாரண நிதியுதவி, சிறு கைத் தொழில் செய்வதற்கு பண மற்றும் பொருள் உதவி, வீடு, கிணறு மலசலகூடம் அமைத்துக் கொடுத்தல். சீதனம் இல்லாமல் திருமணம் செய்கிற ஆண்களுக்கு தவணைமுறையில் வீடு வழங்குதல் கடன்களை அடைக்க உதவி செய்கிறது என்று அவங்கிட வேலைத்திட்டங்கள் நீண்டு கொண்டு போகுது.


ராத்தா, அல்லாஹ் எனக்கு நல்ல வசதியையும் பொருளாதாரத்தையும் தந்திருக்கான். உங்கிட இரண்டு பிள்ளைகளுடைய படிப்புச் செலவுகளை நான் பொறுப்பெடுக்கிறன். உங்கிட வீட்டுப் பிரச்சினையையும், ஏனைய பிரச்சினைகளையும் சம்மேளனத்தில சொல்லி உதவி கேட்கலாம் கண்டிப்பாக அவங்க உதவி செய்வாங்க.. ஊருக்கு போய் அவங்கிட காரியாலயத்தில ஒரு விண்ணப்ப படிவத்த எடுத்து நிரப்பி கொடுங்க அதுக்கு நானும் உதவி செய்கிறன். இனி இப்பிடி குமரு புள்ளைகளை கூட்டிக்கிட்டு அலையாதிங்க.. 


எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருவன் இருக்கான். நல்ல இறை பக்தியுள்ள புள்ள. அவருக்கு நல்ல தொழிலும் இருக்கு சம்மேளன வீட்டுத் திட்டத்தில ஒரு வீட்டுக்கும் விண்ணப்பிப்பம் அதுவும் சரிவந்தா உங்கிட மூத்த மகளுக்கு அவரையே திருமணம் செய்து வச்சிடலாம் அல்லாஹ் எல்லாத்துக்கும் ஒரு தீர்வு வெச்சிருக்கான் ஒன்றுக்கும் நீங்க கவலைப்படாதீங்க..


நம்முட சம்மேளனத்தை முன்மாதுரியா வச்சித்தான் பல ஊர்லயும் இதுபோல வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி வாறாங்களாம். இந்தத் திட்டம் வெற்றியளிச்சதனாலதான்; தனவந்தர்களும் நிறையவே அள்ளிக் கொடுக்கிறாங்களாம். சம்மேளனமும் அதற்கு பொருத்தமான ஆட்களப்போட்டு விசாரித்து தேவையானவர்களை அடையாளம் கண்டு உண்மைக்கு உண்மையா உதவுறாங்களாம் எல்லாத்துக்கும் அல்லாஹ் போதுமானவன். நாளைக்கு காரியாலயத்திற்கு வாங்க' ஆயிசாவையும் பிள்ளைகளையும் வீட்டில் இறக்கி விட்டு விடை பெற்றார் மர்சூக்.


சில தினங்களுக்குப் பின் சம்மேளனத்தின் கூட்டு சக்காத் அமைப்பு கூடியது உதவி கேட்டு வந்த கடிதங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் ஆயிசாவின் கடிதமும் கவனத்திற்கொள்ளப்பட்டது.


விசாரித்த வகையில் ஆயிசாவின் குடும்பத்திற்கு அவசரமாக கிணறும் மலசலகூடமும் கட்;டிக்கொடுப்பதோடு சிறு கைத் தொழில் செய்வதற்கு தையல் மெசின் ஒன்று பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அத்தோடு ஆயிசாவின் மூத்த மகள் பாத்திமாவை திருமணம் செய்ய முன்வந்த பாஹிம் என்ற மணமகனுக்கு சம்மேளன வீட்டுத் திட்டத்தில் ஒருவீட்டை தவணை முறையில் கொடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.


சம்மேளனத்தின் முடிவையும், பிள்ளைகளின் படிப்பிற்கான பணத்தொகையையும் ஆயிசாவிடம் ஒப்படைத்து விட்ட திருப்தியில் பள்ளிவாயலுக்குள் நுழைந்தார் மர்சூக். தன்னுடைய இரண்டு செல்வங்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு அல்ஹம்து லில்லாஹ் என்ற வார்த்தையை அடுத்தடுத்து சொல்லிக் கொண்ட ஆயிசா சம்மேளனத்திற்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.

முற்றும்.


இருண்ட பொழுதும் இரத்த இரவும்


(மதியன்பன் எம்.எஸ்.ஏ. மஜீத்)

(காத்தான்குடிபள்ளிவாயல்கள் இரண்டில் பயங்கரவாதிகள் நடாத்திய துப்பாக்கி சூட்டில் பலியாகி சுவனத்திற்கு சொந்தக்காரர்களாகிய சுஹதாக்களின் நினைவாக எழுதிய கதை இது.) 


'உம்மா, நான் பள்ளிக்குப் போய் இஸாத் தொழுதிட்டு வாரன்'


'அல்லாஹ்ட காவலா போயிட்டு வாங்க மகன்... கரண்டுமில்ல இருட்டாக்கிடக்கு ஓரமாப்போய் ஓரமா வாங்க.. தொழுது முடிஞ்சி வாப்பா, சாச்சா, பக்கத்து வீட்டு மாமா, மோதினார் அப்பா எல்லாரும் வருவாங்க நீங்களும் சோர்ந்து வாங்க...'


தனது ஐந்து வயதுப் பாலகன் அஸ்ரபை உச்சி மோந்து பள்ளிக்கு அனுப்பி விட்டு கதவை இலேசாகச் சாத்திக் கொண்டு உள்ளே சென்றாள் ஆயிஷா.


'உம்மா நான் நானாவுக்கு குர்ஆன் ஓதி முடிச்சிட்டன் தமாம் செய்யனும் மோதின் அப்பா வருவாங்களா'


'ஓம் மகள்.. இஸாத் தொழுதிட்டு வாப்பாவோட வருவாங்க.. நீங்க முன் விறாந்தைக்குள்ள பாயை விரிங்க.. நான் போய் ரொட்டியும் கறியும் கொண்டு வாரன்.'


தன் மூத்தமகள் சமீமாவிடம் சொல்லி விட்டு குசினிக்குள் சென்ற ஆயிசா கண்களில் வழிந்த கண்ணீரை சேலையின் தலைப்பினால் துடைத்துக் கொண்டாள்.


ரொட்டி சுட்டு, குர்ஆன் ஓதி, கத்தம் ஓதும் அளவுக்கு தன் இருபத்தி நான்கு வயது மூத்த மகன் சலீம் கடத்திக் கொல்லப்பட்ட அந்த நிகழ்வு இன்னும் ஆயிஷாவை புழுப்போல் அரித்துக் கொண்டிருந்தது.


000

ஆயிசாவுக்கு ஆறு குழந்தைகள். மூத்தவன் சலீம் அடுத்த நான்கும் பெண்கள் கடைக்குட்டிதான் அஸ்ரப்.


ஆயிஷாவின் கணவர் அஹமது லெவ்வை மனைவியையும், தனது ஆறு குழந்தைகளையும் ஆற்றுக்குப்போய் மீன் பிடித்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டே காப்பாற்றி வந்தார். நாட்கள் நகரநகர தொழில் செய்ய முடியாத அளவுக்கு அஹமது லெவ்வையின் உடல்நிலை தளர்ந்து விட்டது இதனால் குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான் சலீம். ஒரு முடிவுக்கு வந்தவனாக எட்டாம் ஆண்டோடு தன்னுடைய படிப்பை நிறுத்திக் கொண்டு வாப்பாவின் தொழிலோடு இணைந்து கொண்டான்.


தனது மகனின் உதவி அஹமது லெவ்வைக்கு ரொம்பவும் ஆறுதலைத் தந்தது. மீன்பிடித்தொழிலில் வலை வீசுவது, தூண்டல் போடுவது போன்ற எல்லா விடயங்களையும் தனது மகனுக்குக் கற்றுக் கொடுத்தார் அஹமது லெவ்வை.


சலீம் தனியாகத் தொழில் செய்யத் தொடங்கி விட்டான். அதனால் வாப்பா வீட்டுப் பொறுப்புக்களை கவனித்துக் கொண்டிருந்தார்.


வழமைபோல் அன்றும் சலீம் தோணியேறி ஆற்றுக்கு மீன் பிடிக்கச்சென்றாhன். வுழமைக்கு மாறாக அன்று அதிகமாகவே மீன்கள் பிடிபட்டன. பிடிக்கப்பட்ட மீன்கள் துள்ளுவதைப் பார்த்ததும் சலீமின் உள்ளமும் மகிழ்ச்சியால் துள்ளியது.


அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சலீமின் தோணியை நோக்கி இரண்டு தோணிகள் விரைவாக வந்தன. வந்த தோணிக்குள் நின்றவர்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி சலீமின் தோணிக்குள் பாய்ந்து அத்தனை மீன்களையும் தூண்டில் வலை போன்றவற்றையும் அபகரித்துக் கொண்டு சென்று விட்டனர்.


தன்வீட்டிலிருக்கும் மூன்று குமர்களில் ஒன்றையேனும் கரையேற்றவில்லையே எனும் கவலையோடு தன்தோணியை கரையேற்றினான் சலீம் 


வேதனையோடு வீடு திரும்பிய அவன் நடந்தவற்றையெல்லாம் விபரித்தபோது வீட்டில் உள்ளோர் துடிதுடித்துப் போனார்கள்.


இப்படியான காரியங்கள் அடிக்கடி நடப்பதுண்டு ஆனாலும் ஆட்களுக்கோ அல்லது உயிருக்கோ எவ்வித ஆபத்துமில்லை என்பதால் அவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.


எட்டு ஜீவன்கள் எப்படியும் வாழவேண்டும் தான் தொழிலுக்கு மீண்டும் போக வேண்டும் அதற்கு வலை, தூண்டில் வாங்க வேண்டும் இரவெல்லாம் தூக்மின்றி யோசித்தான் சலீம்


துன்பத்திலே துவண்டவன் இறுதியாக தீர்க்கமான ஒரு முடிவோடு காலையில் படுக்கையை விட்டு எழுந்தான். தன் இளைய தங்கையின் இரு காதுகளிலிருந்த இரு மின்னிகளையும் கழற்றிக் கொண்டு கடைத்தெருவுக்குச் சென்று முன்னூற்றி ஐம்பது ரூபாவோடு வீடு திரும்பினான் அவன். ஊரிலுள்ள பல கடைகளில் ஏறி இறங்கினாhன்.; தேடிய வலை கிடைக்கவில்லை. வீட்டாரிடம் விடை பெற்றுக் கொண்டு கல்முனை நோக்கிப் பயனமானான் அதுதான் சலீமின் கடைசிப் பயணமாகவும் அமைந்தது.


அடுத்தநாள் ஊரெங்கும் ஒரே பரபரப்பு. கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த வாகனங்கள் மறிக்கபட்டு பலர் கடத்தப்பட்டுவிட்டார்களாம்


ஆயிஷா பதறிப் போனாள்.


'அல்லாஹ்வே, எண்ட பிள்ளைக்கு ஒன்றும் ஆயிருக்கக்கூடாது' என்று அழுது தொழுது இறைவனிடம் வேண்டினாள் அவள். 


நாட்கள் நகர்ந்தன. சென்ற மகன் வீடு திரும்பவில்லை. இன்று வருவான்..... நாளை வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆயிஷாவின் குடும்பம் நம்பிக்கையிழந்தது. இப்படியே தன் உடன்பிறப்பின் வருகையை ஆவலோடு எதிர்பார்hத்திருந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குற்றுயிராய்ப் போயின.


ஊர் ஜமாஅத்தார்களுக்கு கிடைத்த தகவலின்படி கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் செய்தி எல்லோரையும் இரத்தக்கண்ணீர் வடிக்க வைத்தது. இனிமேலும் எதிர்பார்ப்பதில் பயனில்லை இலவு காத்த கிளிகளாகிப் போயினர் மக்கள்.


வெள்ளிக்கிழமை பின்னேரம் ஊர்மக்களும் உலமாக்களும் பள்ளிவாயலில் ஒன்றுகூடி கடத்திக் கொல்லப்பட்ட மக்களுக்காக அவர்களது சுவனத்து வாழ்வுக்காக இறைவனிடம் அழுது தொழுது பிராத்தித்து விட்டு கவலையோடு கலைந்தனர். ஆயிஷாவின் கணவர் அஹமது லெவ்வையும் பிராத்தனையில் கலந்துவிட்டு வீடு வந்திருந்தார்.


'என்னங்க நம்மிட பிள்ள சலீம் இனி திரும்பி வரமாட்டானா..?' ஆயிஷா தன் கணவனை அக்கரையோடு விசாரித்தாள்.


'இல்லை நம்மிட பிள்ளை இனி திரும்பி வரமாட்டான் எல்லாம் விதிப்படிதான் நடக்குது நீங்க அழாதீங்க.. நான் பள்ளிக்குப் போயிட்டு வாறன்..'


சொல்லிவிட்டு தன் புருசன் பள்ளிக்குப் போனதையும். அதனைத் தொடர்ந்து தனது ஐந்து வயதுப் பாலகன் அஸ்ரபை பள்ளிவாயலுக்கு அனுப்பி வைத்ததையும் நினைத்துப் பார்த்த ஆயிசாவை நிலைகுலையச் செய்தது அந்த பயங்கர சப்தம்.


000


ஏக காலத்தில் இரண்டு குண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக பயங்கர ஓசையுடன் வெடித்தன. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்கள் இருபது நிமிடங்கள் நீடித்த அந்த துப்பாக்கி வேட்டுக்களால் ஊரேஒருகணம் ஊமையாகி நின்றது.


'யா அல்லாஹ், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ் கலிமாவின் சப்தங்கள் வானைப் பிளக்க துப்பாக்கி வேட்டுக்கள் மெல்லமெல்ல ஓய்ந்தன. 


ஊரெங்கும் ஒரே பதட்டம். அச்சம். நடந்தது என்னவென்றறிய மக்கள் அங்கும் இங்கும் அலைந்தனர் காட்டுத் தீபோல் உடனடியாக செய்தி பரவத் தொடங்கியது. 


ஊரின் எல்லையில் இருந்த இரண்டு பள்ளிவாயல்களுக்குள் இஷாத்தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக் கணக்கானோர் மீது இனந்தெரியாத துப்பாக்கி நபர்கள் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். தொழுத மக்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கொண்டிருக்கிறார்கள்.' 


துயரச் செய்தி கேட்டு மக்கள் துடிதுடித்துப் போனார்கள். ஊரே ஒருமித்த மரண ஓலத்தினால் ஒப்பாரி வைத்தது. அல்லோல கல்லோலப்பட்டது. சுடப்பட்டவர் ஒருவர்பின் ஒருவராக மரணித்துக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட உறவினர்கள் மயக்கமுற்று விழுந்தனர்.


தன் உடன் பிறப்புக்கள் யாரென அடையாளம் காணமுடியாமல் பலர் பள்ளிவாயலுக்குள் அங்கும் இங்கும் அலைச்து தேடித்திரிந்தனர்.


ஊரின் பல பள்ளிவாயல்களின் ஒலிபெருக்கிகள் அவசரச் செய்திகளை அடிக்கடி அறிவித்துக் கொண்டிருந்தன.


சகோதரர்களே..! தமது உடன்பிறப்புக்களை பயங்கரவாதிகள் சுட்டுவிட்டார்கள்.. இப்போது ஒருவர்பின் ஒருவராக இறந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். உடனடியாக உதவிக்கு வாருங்கள். வெள்ளைப்பிடவை, இரத்தம், தெம்பிலி, குளுக்கோஸ் இவைலெ;லாம் அசரமாகத் தேவைப்படுகிறது. உடனே கொண்டு வாருங்கள்.' 


ஒலிபெருக்கிச் சப்தம் முடிவதற்குள் பள்ளிவாயலுக்குள் பொருட்கள் வந்து குவிந்தன.


முதலுதவி செய்வதில் பலர் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்


ஒரு மணிநேரம் சென்றிருக்கும் பாதுகாப்புப் படையும், விமானப்படையும், தரைப்படையும் ஊருக்குள் வந்து சேர்ந்தன. இறந்தோரைத் தவிர எஞ்சியோரை விமானப்படையின் ஹெலிகப்டர்கள் சுமந்து சென்றன. வுpமானத்திற்குள்ளும் சிலர் இறந்போனார்கள். மேலெழுந்த விமானங்கள் உடனடியாகத் தரை இறங்கின. குழந்தைகளைத் தவிர அன்றிரவு எவரும் உறங்கவில்லை. எல்லா வீடுகளும் மரணவீடுகளாகவே மாறியிருந்தன.


பொழுது புலர்ந்தது. கரும்பை மொய்க்கும் எறும்புக் கூட்டங்களாக ஊரின் மையப் பள்ளியை ஆண்களும் பெண்களும் மொய்த்தவண்ணம் இருந்தனர்.


அழுகுரல் ஓயவில்லை. உலமாக்களும் ஊர்ப்பிரமுகர்களும் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். தனது கணவனுக்கும் மகனுக்கும் என்ன நடந்ததோ..? இருப்போர் பட்டியலா..? அல்லது இறந்தோர் பட்டியலா..? அல்லது காமுற்றோர் பட்டியலா எதுவுமே தெரியாமல் இரவெல்லாம் தனது நான்கு பெண் மக்களுடனும் அழுதழுது இயலாமல் போன ஆயிஷா விடிந்ததும் பள்ளிவாயலை நோக்கி ஓடினாள் 


வெள்ளைப்பிடவையால் மூடப்பட்ட நிலையில் நூற்றிமூன்று ஜனாசாக்கள் பெரிய பள்ளி வாசலுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. தொண்டர்களாக நின்றவர்கள் ஜனாசாவைத் திறந்து காட்டிக்கொண்டிருந்தார்கள். 


ஆயிஷா ஒவ்வொன்றாகப் பார்த்தாள். தனக்கு முன்னும் பின்னும் பலர் தங்களது உறவினர்களின் ஜனாசாக்களைத் தேடிக் கொண்டே போனார்கள். கையில்லாத, காலில்லாத, தலையில் ஒரு பகுதி இல்லாத, மூளை சிதறிய நிலையில், உருக்குலைந்து அடையாளம் காணமுடியாத பல ஜனாசாக்கள் 


நூற்றி மூன்று ஜனாசாக்கள் மத்தியில் தனது கணவர் மற்றும் ஐந்து வயதுப் பாலகன் மைத்துனன் இப்படி குடும்பத்தில் பலர் அங்கே ஜனாசாக்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள்.



மையங்களைப் பார்த்து மயங்கி விழுந்த ஆயிசாவை அவசரப்பிரிவில் நின்றவர்கள் வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.


இப்படி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் மையவீடுகளாகின.



எந்த வீட்டிலும் சமைக்கவில்லை. ஆண்களெல்லாம் மையத்துக்களை குளிப்பாட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் சோக நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். 


சும்பவம் நடைபெற்ற பள்ளிவாயல் மையவாடி ஒன்றில் நீளமாக வெட்டப்பட்ட ஒருகுழி. அந்த நூற்றி மூன்று சுகதாக்களின் வருகையையும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.


பின்னேரம் அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஜனாஸாத் தொழுகையும் நடைபெற்றது.


ஆயிரக் கணக்கான ஆண்கள் தொழுகையில் கலந்து கொள்ள சோகத்தைச் சுமந்து கொண்டு வீதியின் இரு மருங்கிலும் நின்றவாறு விம்மிவிம்மி அழுதுகொண்டிருந்தனர் பெண்கள்


திடீரென மேகம் கறுத்தது, வானம் இருண்டது. மழைபெய்யத் தொடங்கியது. எதையுமே பொறுப்படுத்தாமல் அத்தனை ஜனாசாக்களையும் தோளில் சுமந்து கொண்டு துன்பத்தை இதயத்துள் சுமந்து கொண்டு மக்கள் சாரிசாரியாக கபுறை நோக்கி விரைந்தார்கள்


'லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர்ர சூலுல்லாஹ்' ஆயிரக்கணக்கான மக்களின் ஒருமித்த கலிமாவின் குரல் வான்வரை சென்று திரும்பியது.


ஒரேகுழியில் தள்ளித்தள்ளி அடுக்கப்பட்ட அத்தனை ஜனாசாக்களையும் மக்கள் கைகளினால் மண்ணை அள்ளிப்போட்டு கபுறுகளை மூடிவிட்டு மழைநீரும், கண்ணீரும் தங்களது உடல்களை நனைக்க கலங்கிய இதயங்களோடு மக்கள் கலையத் தொடங்கினார்கள்.


யாருக்குயார் ஆறுதல் சொல்வது..? ஊரின் எல்லா வீடுகளும் உணர்விழந்து நின்றன. ஊரின் எல்லைப்புற பள்ளிகளில் சம்பவம் நடைபெற்றதால் அந்தப்பகுதியிலேயே அதிகமானவர்கள் மரணித்திருந்தார்கள். ஓரு வீட்டுக்குள் ஆறுதல் சொல்லச் சென்றவர்கள் ஒன்பது வீட்டுக்கு ஆறுதல் சொல்லிவிட்டே வெளியேறினர்.


மறுநாள். பொழுதும் புலர்ந்தது. ஆனால் ஆயிஷாவின் வீடு இருளாகவே இருந்தது. கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்த ஆயிஷா, மூன்று குமர்களையும் தன் கைக்குழந்தையையும் அணைத்தவாறு அழுதுகொண்டிருந்தாள். நமது குழந்தைகளுக்கு இப்போது சாப்பாட்டிற்காவது வழிகிடைத்தால் போதும் என ஆண்டவனை அழுது தொழுது வேண்டினாள்


வசதி படைத்தவர்கள் வாரிவாரி வழங்கினார்கள். சமூக சேவை அமைப்புக்களும் துரிதமாக செயல்பட்டன. ஷூஹதாக்களின் குடும்பங்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது. ஆயிஷாவின் குடும்பமம் அந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டது.


அவசரஅவசரமாக வேயப்பட்ட ஒரு ஓலைக்குடிசைக்குள் ஆயிஷாவும் தனது இத்தாப் பயணத்தை ஆரம்பித்தாள்.


நண்டுகள் போல் நாட்கள் நகர்ந்தன. நான்கு மாதங்களும் பத்து நாட்களும் அதற்குள் சேர்ந்து கொண்டன. 


ஆயிஷா இத்தாக் கடமையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.


நிவாரணப் பொருட்களும் ஏனைய உதவிகளும் படிப்படியாகக் குறையத் தொடங்கின. மூன்று குமர்கள் வயதுக்கு வராத ஒரு மகள் தன்னோடு சேர்த்து ஐந்து ஜீவன்கள் எப்படியோ விரும்பியோ விரும்பாமலோ இனி உயிர் வாழ்ந்துதான் ஆக வேண்டும். அதற்கான தீவிர ஆலோசனையில் இறங்கிய ஆயிஷா இரு வாரமாக அங்குமிங்குமாக அலைந்தாள்.


பணக்காரப் பட்டியலிலிருந்த தன் உறவுக்காரர்களின் வீட்டுப்படிகளிலெல்லாம் ஏறி இறங்கினாள். சிலர் உதவினார்கள் இன்னும் சிலர் ஒதுக்கினார்கள்.


சேர்த்த பணம் பத்தாயிரத்தில் பழைய தையல் மெசின் ஒன்றை வாங்கிக் கொண்டாள் ஆயிஷா.


இரண்டாவது மகள் நசீலா தையலில் பயிற்சி பெற்றிருந்தது ரொம்பவும் உதவியாக இருந்தது ஆயிஷாவுக்கு. இளையமகள் பசீலாவின் கல்விச் செலவுகளை ஊரில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்று பாரமெடுத்துக் கொண்டது.


000


இரண்டு வருடங்களின் பின்னால். 


ஒரு வெள்ளிக்கிழமை இரவுச் சாப்பாட்டின் பின் இப்றாஹீம் ஹாஜியார் தன்மனைவியிடம் மெதுவாகக் கதையைத் தொடங்கினார்.


'புள்ள ஸல்மா, நான் ஒரு நல்ல காரியம் பண்றதாக முடிவு செய்திருக்கேன். இது சம்பந்தமாக உங்கிட முடிவும் எனக்குத் தேவைப்படுகிறது.'


'என்னங்க.. நீங்க எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறீங்க, நல்ல காரியம் பண்ணியிருக்கிறீங்க.. அதையெல்லாம் நான் வேண்டாமென்றா சொல்லியிருக்கேன். அல்லாஹ் நமக்குத் தந்த செல்வம் அதை கட்டாயம் நாம தர்மம் செய்யணும் மற்றவர்களுக்குக் கொடுக்கணும்'


'இல்ல ஸல்மா அது வந்து....'


'எனக்குப் புரியல்லங்க.. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்க..'


ஸல்மா விளக்கம் கேட்டாள். இப்றாஹீம் ஹாஜியார் விபரித்தார்.


'பள்ளியில சுடுபட்டு மௌத்தானாரே நம்முட அஹமது லெவ்வைக்காக்கா அவர்ர மூணு பெண்பிள்ளைகளும் வாழ வழயில்லாம இன்னும் ஊட்டோட குமர்களாக இருக்காம்... அதில மூத்த பிள்ள சமீமாவுக்கு வயசு முப்பதாம்.. அத நான் இரண்டாம் தாரமாக கட்டிக்கலாமென்று நினைன்கிறேன் அதுதான் உங்கிட்ட ...'


'நீங்க கேட்டு எப்பவாவது நான் மறுப்புத் தெரிவிச்சிருக்கேனா.. இல்லங்க..' அஹமது லெவ்வைக் காக்கா நமக்கு ரொம்பவும் உதவியிருக்காரு அதனால நம்முடைய சொத்துல கொஞ்சத்த அவர்களுக்கு எழுதிக் கொடுத்து விடலாம் எப்படியோ உங்கிட யோசனைப்படி செய்ங்க..'


'ஸல்மா, வேன்ல கடத்திக் கொண்டாங்களே நம்முட கனீபாக்காக்கா அவர்ர பொஞ்சாதியையும், நம்முட இஸ்மாயில் முதலாளி இரண்டாம் தாரமாக முடிச்சிருக்காராhம். இண்டைக்கு குத்பாவிலயும் மறுவாழ்வு கொடுக்கிறதைப்பற்றியும் இரண்டாம் கல்யாணம் முடிக்கிறது பற்றியும் மௌலவி நிறையச் சொன்னாரு. பாவம் ஆயிஷாட குடும்பம் எந்தவிதமான துணையும் அவங்களுக்கு இல்லை நம்முட குடும்பத்தோட அவர்களையும் சேர்த்துக்கலாம் அதுதான்..'


'சரிங்க, மார்க்கம் அனுமதிச்சித்தானே இருக்கு நீங்க உங்க விருப்பப்படியே செய்யுங்க..'


இப்றாஹீம் ஹாஜியார் நீண்ட சிந்தனையோடு நித்திரைக்குச் சென்றார்.


'மகள் சமீமா.. நம்முடைய இப்றாஹீம் ஹாஜியார் என்னை வரச் சொல்லி அனுப்பியிருந்தாரு.. நான் போய் சந்திச்சப்போ அவரு உங்கள இரண்டாம் தாரமாக கட்டிக்கிறதாகச் சொன்னாரு... நான் உங்கிட்ட கேட்டு முடிவு சொல்றதாகச் சொல்லிவிட்டு வந்தேன். நீங்க என்ன மகள் சொல்றீங்க.. உங்கிட முடிவச் சொன்னீங்க எண்டா நான் ஹாஜியாருக்கிட்ட சொல்லிடுவன்


உம்மா, ஹாஜியாருக்கு இரண்டாம் தாரமா வாழ்றதுக்கு எனக்கு விருப்மில்ல... வேற கல்லாணம் பாருங்க... இப்படி சொல்வேன் என்று எதிர்பார்க்கிறீர்களா..? இல்லம்மா... நமக்கு வாழ வழியில்ல, வசதியில்ல, ஆண்துணையில்லை அல்லாஹ் எனக்கு ஹாஜியாரைத்தான் கணவன் எண்டு எழுதியிருந்தா அது நடக்கட்டும் நான் சம்மதிக்கிறேன்... நீங்க முடிவைக் கொடுங்க..' 


இப்றாஹீம் ஹாஜியார், சமீமா திருமணம் மிகவும் எளிமையாக பள்ளிவாயலில் நடந்தேறியது. 


இரண்டு குடும்பங்களும் பலமாத காலம் இப்றாஹீம் ஹாஜியாரின் தயவிலேயே வாழ்ந்து வந்தது. என்றாலும் இரு குடும்பங்களும் ஒரேவீட்டில் வாழ்வது கொஞ்சம் கஸ்டமாகவே இருந்தது.


இப்றாஹீம் ஹாஜியார் ஆழமாக யோசித்து விட்டு தன் இரண்டாவது மனைவி சமீமாவிடம் ஆலோசனை கேட்டார்.


'சமீமா நாங்க இரண்டு குடும்பமும் இனிமேலும் ஒன்றாக வாழ்றது அவ்வளவு நல்லதாக இல்லை நான் உங்களுக்கு தனியாக ஒருவீடு பார்த்து இருக்கேன்... நாங்க அங்கே போய்விடலாம் உங்க உம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் ஏதாவது தொழில் வசதியையும் செய்து கொடுக்கலாம்'


மறுப்புத் தெரிவிக்கவில்லை சமீமா. உம்மாவையும் தன் சகோதரிகளையம் பிரிந்து போவது மனதுக்கு வேதனையாக இருந்தாலும் தன் கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு கவலையோடு வெளியேறினாள் சமீமா.


பக்கத்துத் தெரிவில் இருந்த காமன்ஸ் ஒன்றில் கதைத்து தைப்பதற்கான துணிகளை வாங்கிக்கொடுத்தார் இப்றாஹீம் ஹாஜியார். நஸீலா தைக்கும் துணிகளுக்கு பட்டன் கட்டுவது மடிப்பது போன்றவற்றையெல்லாம் இளைய சகோதரிகள் பஸீறாவும், பமீலாவும் செய்து வந்தார்கள். தைத்த ஆடைகளை காமன்சிலும் புதிய துணிகளை வீட்டுக்கும் சுமந்து வரும் ஆயிஷா தன்குடும்ப சுமைகளையும் சுமந்து கொண்டிருந்தாள்


ஏதோ கிடைக்கின்ற வருமானம் ஆயிஷாவின் குடும்ப சாப்பாட்டுக்கு மட்டுமே போதுமாக இருந்தது.


காலம் மிகவும் வேகமாகக் கரைந்தது. ஆயிஷாவின் நான்காவது பிள்ளையும் இப்போது குமராகிவிட்டது. ஆனால் ஆயிஷாவின் வாழ்க்கையில் மட்டும் விடிவு வரவில்லை.


நஸீலாவின் தையல், தங்கைகளின் தையலுக்கான உதவி தாய் ஆயிஷாவின் மேற்பார்வை இவைதான் ஆயிஷாவின் குடும்பத்தை இப்போதும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.


ஆயிஷாவுக்கு இப்போது மீண்டும் மூன்று குமர்கள். எப்படிக்கரையேற்றுவது எனும் ஏக்கம் ஆயிஷாவுக்கு மட்டுமல்ல இந்த ஊரிலுள்ள நூற்றுக்கணக்கான ஆயிஷாக்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.


பணக்கார சமூகம் விழித்தெழுமா..? வேதனை, விரக்தி, கவலை இவைகளை நித்தமும் சுமந்து கொண்டு நாதியற்று அலைகின்ற அபலைப் பெண்களுக்கு வாழ வழி சமைத்துக் கொடுக்குமா..? என்று பல குடும்பங்கள் இன்னும் வழிபார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.


முற்றும்

' நம்பிக்கைத் துரோகம் '


(மதியன்பன் எம்.எஸ்.ஏ. மஜீத்)

(அரசியல் வாதிகளின் ஆடம்பர வாழ்கை தொடர்பில் எழுதப்பட்ட கதை)

'வாப்பா இங்க வந்து பாருங்களேன் வாசல்ல பெரியவெள்ளம் போட்டிருக்கு.'

மகள் ஆயிஷாவின் இனிய குரல் குட்டித் தூக்கம்போட்டுக் கொண்டிருந்த இஸ்மாயில் ஹாஜியாரின் காதினை இலேசாக கிள்ளிவிட்டுச் சென்றது.

தஹஜ்ஜத் நேரம் எழும்பும் ஹாஜியார் சுபஹைத் தொழுதுவிட்டு சற்றுநேரம் குர்ஆனையும் ஓதிவிட்டு ஒருகுட்டித் தூக்கம் போடுவது அவருக்கு வழக்கமாக இருந்தது.

மகளின் குரல் கேட்டு வெளியே வந்து வாசலை எட்டிப் பார்த்தார் ஹாஜியார். இரண்டு நாட்களாக இலேசாகப் பெய்த மழை இரவு பெய்த அடை மழையோடு சேர்த்து ஒரு அடி உயரத்திற்கு வெள்ளம் போட்டிருந்தது.

'இடி, மின்னல், காற்று, மழை எல்லாம் அல்லாஹ்வோட அருள் மகள். டவுன்ல உள்ள நம்மிட கடைக்குள்ளேயும் தண்ணியோ என்னவோ நேரத்தோட போனா பாத்துக்கலாம்.'

மூலைக்குள் முடங்கிப் போயிருந்த குடையை எடுத்துக் கொண்டு பிரதான வீதியிலுள்ள தனது கடையை நோக்கி நடந்தார் ஹாஜியார்.

கடையைத் திறந்தவர் 'அல்ஹம்து லில்லாஹ்' கடைக்குள்ள தண்ணி வரல்ல. பின்னால் உள்ள ஸ்டோர் ரூமைத் திறந்து பார்த்தார் அங்கும் தண்ணீர் இல்லை என்றாலும் முன்னர் மூட்டை மூட்டையாக இருந்த சாமான்கள் இப்போது இல்லை என்பதை எண்ணும் போது அவருக்கு கவலையாக இருந்தது.

வழமை போல் தனது பலசரக்குக் கடையை முழுமையாகத் திறந்து கொண்டு வியாபாரத்திற்கு அயத்தமாக யாசீன் சூறா ஒன்றை ஓதத் தொடங்கினார்.

வியாபாரம் ரொம்பவும் மந்தமாகவே இருந்தது. நாளுக்குநாள் இப்படி விலை கூடினா எவன் கடையிலசாமான் வாங்குவான் நம்மிட்ட சாப்பாட்டுச் சாமானே வாங்க ஆளில்லை எண்டா மத்தக் கடைக்கார முதலாளிமார்ர நிலைமை என்ன....? சிந்தித்த போதுதான்

'அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜியார்.'

ஹாஜியாரின் சிந்தனையைக் கலைத்தது அந்தக் குரல்.

'வஅலைக்கு முஸ்ஸலாம் வாங்க மாஸ்டர். ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் பக்கம். உட்காருங்க...'

கதிரையில் அமர்ந்து கொண்டார் கனிபா மாஸ்டர்.

'நான் ரெண்டு வருஷம் நோபேயில சவூதி போயிருந்தேன் போன கிழமைதான் ஊருக்கு வந்தேன் அது சரிஹாஜியார் கடையில சாசமானனெல்லாம் குறையுது மகன் பஸீரையும் கானல்ல .... ஏதாச்சும்...'

கனிபா மாஸ்டரின் இழுவையின் அர்த்தம் புரிந்தது ஹாஜியாருக்கு.

வீட்டிலிருந்து வரும்போது கொண்டு வந்த பிளேண்டியை இரண்டு டம்ளரில் ஊற்றி ஆளுக் கொன்றாக குடிக்கத் தொடங்கினார்கள்.

கனிபா மாஸ்டரின் கேள்விக்கான பதில் ஒரு சீரியல் போல் இஸ்மாயில் ஹாஜியாரின் கண்முன் ஓடத் தொடங்கியது.

 

அது மிகவும் வேகமாக முன்னேறிய ஒரு கிராமம். இப்போது பிரதான நகரங்களில் ஒன்றாகமாறியிருந்தது. அதன் பிரதான வீதியில்தான் 'இஸ்மாயில் ஸ்டோர்' எனும் பெயரில் ஹாஜியாரின் பலசரக்குக் கடையும் முக்கிய கடைகளில் ஒன்றாக இருந்தது.

ஹாஜியாருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஆண்வாரிசு இல்லாத காரணத்தினால் கடையைத் தொடர்ந்து நடாத்துவது ஹாஜியாருக்கு கொஞ்சம் கஸ்டமாக இருந்தது.

ஒருநாள்

'ஹாஜியார், இந்தப் பையன் ரொம்ப நல்ல கெட்டிக்காரன் வாப்பா மௌத்தாப் போயிட்டாரு படிப்பிக்க அவங்கிட வீட்டில வசதியில்லையாம் இவன நீங்க வச்சிக்கிட்டா உங்களுக்கு கடையில உதவியாக இருப்பான் முடிஞ்சா பாடசாலைக்கு அனுப்பி படிப்பியுங்க.. அல்லாஹ் உங்களுக்கு மேலும் றஹ்மத் செய்வான்.'

கனிபா மாஸ்டர் கூட்டிவந்து ஹாஜியார் கடையில் சேர்த்துக் கொண்டவன்தான் இந்த பஸீர்.

பஸீரை தனது சொந்த மகன் போல் வளர்த்து வந்தார் இஸ்மாயில் ஹாஜியார். அவன் பாடசாலையில் படிக்கவும் உதவினார். அவனது அறிவு, ஆற்றல், துடிப்பு எல்லமே ஹாஜியாருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. நாள் போகப்போக கடையின் பொறுப்புக்களை ஹாஜியார் அவனிடமே கொடுத்து விட்டார். சாமான்களை கொள்வனவு செய்வது விற்பனை செய்வது வங்கித் தொடர்பு எல்லாமே பஸீரின் கைவசமாகியது.

வருடங்கள் பல உறுண்டோடின. ஹாஜியார் ஓய்வெடுக்க எண்ணினார் ஊரின் முக்கியஸ்தர்கள் பலரை அழைத்து அவர்கள் முன்னிலையில் தன்னுடைய கடையை அவனிடமே கணக்குப் போட்டுக் கொடுத்தார்.

மாதமாதம் வீட்டிற்கு கணக்கு வந்தது கூடவே பணமும் வந்தது. ஹாஜியாரின் குடும்பம் கவலையில்லாமல் காலம் கடத்தத் தொடங்கியது.

வளர்ப்பு மகன் பஸீரின் நடவடிக்கைகள் திருப்திகரமாகவே இருந்தது ஹாஜியாருக்கு.

தனது மனைவி ஸல்மாவுடன் கலந்தாலோசித்த பின்னர் மூத்தமகள் ஸப்னாவை பஸீருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார் ஹாஜியார்.

'தம்பி பஸீர், உங்கிட்ட ஒரு விசயம் பேசனும்......'

'சொல்லுங்க முதலாளி'

எண்ட மூத்தமகள் ஸப்னாவ உங்களுக்கு நிகாஹ் செய்து வைக்க நாங்க முடிவெடுத்திருக்கோம். உங்கிட அபிப்பிராயத்தையும் கேடடுக்கத்தான் இங்க....'

ஹாஜியார் நேரடியாகவே விசயத்திற்கு வந்தார்.

பஸீரும் நேரடியாகவே முடிவைச் சொன்னான்.' மன்னிக்கனும் முதலாளி, நான் ஸீனத் எண்ட ஒரு பிள்ளைய விரும்புறன். அதத்தான் கல்யாணம் பன்றதாகவும் முடிவு கொடுத்திட்டன். உங்கிட மகள கல்யாணம் பன்ற நிலையில நான் இல்ல..'

ஹாஜியார் மறுப்புத் தெரிவிக்கவில்லை. பஸீரின் நியாய பூர்வமான கருத்தை ஏற்றுக் கொண்டார்.

பஸீர், ஸீனத் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கான அத்தனை செலவுகளையும் ஹாஜியாரே பாரமெடுத்துக் கொண்டார்.

காலம் மீண்டும் தனது கடமையைச் செய்து முடித்தது. பஸீர் பற்றி அவ்வப்போது ஹாஜியாருக்குக் கிடைக்கும் தகவல்கள் மிகவும் மோசமாகவே இருந்தது.

'ஹாஜியார், ஊருக்குள்ள பஸீரைப்பற்றி பலரும் பலவிதமாகப் பேசுறாங்க... மோட்டார் சைக்கிள்ள போனபுள்ள இப்ப காறில போறாராம் இருக்கிற வீட்ட உடைச்சிபோட்டு ரெண்டு மாடியில வீடு கட்டுறாங்களாம். அவர்ர பொஞ்சாதிட பெயரில பஸார்ல ஒரு கடையும் வாங்கியிருக்காராம். எதுக்கும் கடையையும் பார்த்துக் கொள்ளுங்க ஹாஜியார்.'

பக்கத்து வீட்டுக் காரர் சொன்ன வார்த்தைகள் ஹாஜியாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. விசாரித்துப் பார்த்தார் பின்னர் அது உண்மை என்பதையும் உறுதி செய்து கொண்டார்.

கடைக்கு சம்பந்தம் இல்லாமல் கடைப் பணத்திலேயே கமிசன் வியாபாரம். கள்ளத்தனமான கணக்கு விபரங்கள் இப்படி இன்னோரன்னவை பஸீரின் நரித்தனமான போக்காக மாறியிருந்தது.

உடனடியாக ஊரின் முக்கியஸ்தர்களை மீண்டும் கூட்டி பஸீரிடமிருந்து கடையை மீண்டும் பாரமெடுத்துக் கொண்டார் ஹாஜியார்.

கடையின் கணக்குகள் சீராக இருக்கவில்லை. சாமான்களும் குறைவாகவே இருந்தது. வங்கியில் இருந்து காசோலைகளும் திரும்பியிருந்தன. பலருக்கு பணமும் கொடுக்க வேண்டியிருந்தது.

அத்தனை பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்தார் ஹாஜியார். கடை காலியாகியது.

ஒரு மாதம் கடையை மூடிய பின்னர் மிஞ்சிய சாமான்களோடு கடந்த வாரம்தான் மீண்டும் சின்னதாக கடையைத் திறந்தார் அவர்.


'என்ன ஹாஜியார், ஊத்தின தேயிலையை குடிக்காம அப்படி என்ன யோசனை..? '

கனிபா மாஸ்டரின் குரல் இஸ்மாயில் ஹாஜியாரின் கனவைக் கலைத்தது.

'நீங்க கூட்டிவந்து எங்கிட்ட சேர்த்த பஸீரைப் பத்தித்தான் நினைச்சுப் பார்க்கிறேன் மாஸ்டர். அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான். அவனுக்கு எவ்வளவோ வசதி செய்து கொடுத்தன். எண்ட சொந்தப் புள்ளபோல அவன வளர்த்து வந்தேன். எண்ட சொத்தையெல்லாம் அவன் மொத்தமாக அழிச்சிட்டான். இப்ப எண்ட நிலைமையை பாருங்க மாஸ்டர். அவன் எனக்குச் செய்த துரோகத்தை மறக்கவும் முடியல்ல. மன்னிக்கவும் முடியல்ல. நான் நிம்மதியாகத் தூங்கி பல மாதமாச்சி மாஸ்டர்.'

பஸீரின் துரோகச் செயலை விலாவாரியாகச் விளங்கப்படுத்தினார் ஹாஜியார்.

ஹாஜியாரின் அந்த வேதனையான வார்த்தைகளும், அவரது தாடியை நனைத்த கண்ணீரும் கனிபா மாஸ்டரையும் கரைய வைத்தது.

'எங்கள் இளைய தளபதியே வருக... மாசில்லாத் தலைமகனே வருக.'

வான் பிளக்கும் கோசங்கள் ஒலி பெருக்கியின் ஊடாக அந்த ஏரியாவையே அதிர வைத்தது. இருவரும் எட்டிப் பார்த்தார்கள்.

பாதுகாப்புப் படை சூழ பொது மக்களை விலக்கிய வண்ணம் அந்த வாகனத் தொடர் சென்று கொண்டிருந்தது.

'யாரு மாஸ்டர் இவ்வளவு பாதுகாப்போட போற..? ' ஹாஜியார் கேட்டார்.

'முன்னுக்கு பெஜ்ரோவில நம்மிட மந்திரி போறாரு வெள்ள அழிவு பார்க்கப் போறாங்களாம்.'

'மந்திரியெண்டா நம்முட றாசிக்கிட மகன் அன்வர்தானே..? '

'ஆமாம் ஹாஜியார்.'

'அது நல்ல குடும்பத்தச் சேர்ந்த புள்ள வறுமையிலயும் ரொம்பவும் கௌரவமாகவும் நேர்மையாகவும் வாழ்ந்த குடும்பம். இப்ப ரொம்பவும் வசதியோட போகுதே மந்திரியானா இப்பிடி அதிகமாக உழைக்கலாமா, வசதியோட வாழலாமா.?'

ஹாஜியார் அப்பாவித் தனமாகக் கேட்டார்.

'இல்ல ஹாஜியார், எம்பி யெண்டாலும் மந்திரியெண்டாலும் அவங்களுக்கும் நம்மளப்போல சம்பளம்தான்.'

'அப்பிடியெண்டா இவ்வளவு வசதி அவங்களுக்கு எப்பிடி மாஸ்டர் கிடைக்குது.'

'அது ஒது நீண்ட கதை ஹாஜியார். றோட்டுப் போடுறது, பில்டிங் கட்டுறது வேலை வாய்ப்புக் கொடுக்கிறது, நிவாரணம் கொடுக்கிறது அதுகள்ள கிடைக்கிற கமிசன் இப்பிடி நிறையச் சொத்துக்கள சேர்க்கலாம். அதுமட்டுமல்ல அவங்களுக்கு நிறைய கிம்ளமாகவும் கிடைக்குது.'

'அப்ப. நம்முட அன்வரும் இப்படித்தான் உழைக்கானா? மற்றவங்க வாங்கினா அது லஞ்சம், குற்றம், விசாரணை அரசியல் வாதிகளுக்கு இல்லையா ? ' ஹாஜியார் மீண்டும் கேட்டார்.

'அத. இப்ப ஏன் கேக்கிறீங்க ஹாஜியார். அவன் இப்ப அன்வர் இல்ல, அரசன். அவனுக்கு இருக்கிற சொத்துவிபரம் அவண்ட குடும்பத்துக்கே தெரியாதாம். ஊர்ல வீடாம், கொழும்புல பெரிய சொத்தாம் சுவிஷ்பேங்கில பணமாம். அவுஸ்ரேலியாவுல அப்பிள் தோட்டமாம், வாகனங்கள் வேறாம் அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில் அதெல்லாம் குற்றமில்லயாம் சகஜமாம் ஹாஜியார்..'

கனிபா மாஸ்டர் அடிக்கிக் கொண்டே போனார்.

'சுபஹானல்லாஹ்' மூக்கின் மேல் விரலை வைத்தார் ஹாஜியார்.

'அடப்பாவி, அவன் நமக்கிட்ட சைக்கிள்ள வந்துதானே வோட்டுக் கேட்டான். நான் சொத்துச் சேர்க்கமாட்டேன். உங்களுக்காக உயிரைக் கொடுப்பேன் எண்டு பள்ளி மிம்பரில நிண்டு சத்தியம் வேறசெய்தானே... . அவனா இவன்.? ' ஹாஜியார் அதிசயத்தில் ஆழ்ந்து போனார்.

'அன்வர் மட்டுமல்ல ஹாஜியார். அதிகமான அரசியல் வாதிகள் இப்படித்தான் இருக்காங்க. உழைக்காங்க.. சமூகத்துக்காக சாகப்போறேன் எண்டுதான் வாறாங்க.. ஆனால் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து அல்லது சமூகத்தை விற்றுத்தான் அவங்க வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.. தேர்தல் எண்டு வந்தா ஊருப்பக்கம் வருவாங்க. வீர வசனங்கள் பேசுவாங்க.. நிறைய வாக்குகளைத் தருவாங்க.. வெற்றி கிடைச்சா அந்தப்பக்கமே தலைகாட்ட மாட்டாங்க.. புனிதமான அரசியலை ரொம்ப கேவலமாக மாற்றிட்டாங்க.. இது இந்த சமூகத்திற்கு இவங்க செய்கிற துரோகம் மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கான சாபக் கேடும்தான் ஹாஜியார்..'

கனிபா மாஸ்டர் சொல்லச் சொல்ல ஹாஜியார் சிந்தனையோடு தலையை ஆட்டிக் கொண்டே இருந்தார்.

கனிபா மாஸ்டர் மீண்டும் தொடர்ந்தார்.

'ஹாஜியார், பஸீர் செய்யத துரோகத்தை எங்களால மறக்க முடியல்ல, மன்னிக்க முடியல்ல. ஆனால் இந்த அரசியல் வாதிகள் இந்த சமூகத்திற்கு செய்கிற துரோகத்தை மன்னிக்கிறோம். மறக்கிறோம். ஏன் ஹாஜியார். 

தனிப்பட்ட முறையில் நமக்கு அநீதி நடந்தா அது துரோகம். அது சமூக ரீதியாக நடந்தா துரோகமில்லையா..? நல்லவங்க அரசியலுக்கு வந்தா அடுத்த கனமே அவங்க நாறிப்போறாங்க. இந்த துரோக அரசியலுக்கு அரசியல் வாதிங்கள் மட்டும் காரணமில்ல. ஒரு வகையில நாங்களும் காரணம்தான். அரசியலுக்கு எவன் வந்தாலும் எதைப்பற்றியுமே சிந்திக்காம அவனுக்கு பின்னாலேயே படையெடுத்துப் போறது நமக்குப் பழக்கமாய்ப் போச்சி... வாக்குப்போடுற ஒவ்வொரு தனிமனிதனும் சுயமாக சிந்தித்து முடிவெடுத்து தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்தினா இந்த சாபக்கேடான அரசியலில்ல இருந்து விடுபட்டு ஒரு நல்லாட்சிக்கான அரசியல் கலாச்சாரத்த தோற்றுவிக்கலாம், அதிலவெற்றியும் காணலாம்.'

கனிபா மாஸ்டரின் இந்தக் கேள்ளவி கலந்த வார்த்தைகள் இஸ்மாயில் ஹாஜியாரை நீண்ட சிந்தனைக்கு இட்டுச் சென்றது.

முற்றும்.




No comments:

Post a Comment