02 October 2015

புங்குடுதீவுப் பூவே..வித்தியா..!

(மதியன்பன்)


புங்குடுதீவுப் பூவே..!
உன்னை
பங்கீடு வைத்துப் பசியாறியிருக்கிறார்கள்
இந்தப் பரதேசி நாய்கள்

ஒரு
பள்ளிப் புத்தகம் நீ..
உன்னைப் பாதுகாக்க வேண்டியவர்களே
மாறிமாறி
பக்கம் பக்கமாக கிழித்திருக்கிறார்கள்


நீ..
அழகிய ஓவியம் என்பதாலா
வெறிநாய்கள்
சிறுநீர் கழித்து உன்னை
சேதப்படுத்தியிருக்கிறார்கள்...


அந்த
அலரிமரக் காடே அழுததே
தன்; கண்ணெதிரே
ஒரு புல்லாங்குழலின் முகாரி ராகம் கேட்டு...

உன் அழுகுரல்
அந்த சொறி நாய்களின் செவிகளுக்கு
அப்போது
எட்டாமல் போனது ஏன்..?

காட்டுக்குள்
கன்னிப் பெண்ணை இழுத்துச் சென்று
கூட்டு வன்புணர்பு
கொடிய மிருகங்கள் கூட
இப்படி கொடூரமாக நடந்து கொள்ளாது..

உன்
ஆத்மா அடங்கும் போது
எப்படித் துடித்திருப்பாய்...ஃ
நினைத்தாலே வெடித்துவிடும் இதயம்..

உன் இலட்சியம்
என்னவென்று நாம் அறியோம்
ஆனால்
பெற்றவர்களின் இலட்சியம்
இங்கே
பெரும் கேள்விக் குறியாய் போனதே..?


வித்தியா..!
இப்படித்தான்
சீமா எனும் செந்தாமரையையும்
எங்களுரில்
சீரழித்துத் சிதைத்தார்கள்

அழுகை. ஆர்ப்பாட்டம்
அரசியல் வாதிகளின் அறிக்கை
எல்லாமே
ஏழு நாட்களுக்குள் தீர்ந்து போனது
மக்களும்
ஏமாந்து போனார்கள்.

நீ..
சிதைக்கப்பட்ட செய்தி கேட்டு
உடலில்
ஓடிய இரத்தம் கூட உறைந்து போனது

அந்த
வெறிநாய்களின் குறிகளை
வேரோடு
தறித்திருக்க வேண்டும்.
இல்லை
தலைகளை வேறாய் கொய்திருக்க வேண்டும்

உன் உடலோடு
அந்த சொறி நாய்களின் உடல்களையும்
சுடுகாட்டுக்கு
கொண்டு சென்றிருக்க வேண்டும்
இல்லை
காட்டு நாய்களுக்கு
இரையாய் போட்டிருக்க வேண்டும்.

என்ன செய்ய
சட்டத்தின் ஓட்டை
இன்னும் சாதகமாக இல்லையே...?

இதுவே அறபு நாடென்றால்
இப்போது
காமுகர்களின் கதையும்
கந்தலாகியிருக்கும்.

21.05.2015

No comments:

Post a Comment