03 March 2018

எரியும் தேசத்தில் அவர்களும். நானும்...

வலம்புரி கவிதாவட்டம் இன்று (01 / 03 /2018) கொழும்பில் நடாத்திய அதன் 46 ஆவது பெளர்ணமி கவியரங்கில் அடியேன் வாசித்த கவிதை

எரியும் தேசத்தில் அவர்களும். நானும்...


(மதியன்பன்)



விரிந்த உலகம் என்பதால்
நான்,
இறக்கைகளை விரித்துப் பறக்கிறேன்

இயற்கையின் அழகு, வனப்பு
எல்லாமே
இயல்பு நிலை இழந்து கிடக்கிறது

எட்டிப் பார்க்கிறேன்
ஓரிடம்
பற்றி எரிவது தெரிகிறது
என்
இறக்கைகளை கொஞ்சம் பணிக்கிறேன்



விமானங்கள் கக்கும்
விசக் குண்டுகளோடு
நானும்
சிரியா எனும் தேசத்துள் சிதறி விழுகிறேன்.



தீப் பிழம்பொன்று
அங்கே
தீனி கேட்டுத் தேங்கித் தேங்கி அழுகிறது
என் விழிகளுக்கு தெரிகிறது.
குற்றுயிரான சிரியக் குழந்தைகள்
அதன்
கோரப் பசிக்கு பலியாகிறார்கள்.

இதயம்
இயங்க மறுக்கிறது
துப்பித்துக் கொள்ள முனைகிறேன்...

சிரியா என்று
சரியாக மொழியத் தெரியாத
மழலைகளின் அழுகுரல்
என்னை
மரண விளிம்புக்கு அழைத்துச் செல்கிறது

உற்றுப் பார்க்கிறேன்
இரத்த ஆறொன்று
இடம் பெயர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆற்று நீரோடு
எலும்புகளும்,சதைகளும்
இன்னும்
ஏராளமான பொருட்கள்
இழுபட்டுச் செல்வது தெரிகிறது

என் இதயம்
முள்ளில் பட்ட சீலைபோல்
முழுவதுமாய் கிழிந்து போகிறது.

பருவகாலத்துப் பறவைகளாய்
விமானங்கள்
படையெடுத்து வருகின்றன
செய்வதறியாது
சிரிய தேசத்து மக்கள் சிதறி ஓடுகிறார்கள்.

சற்று நேரத்தில்
குடியிருப்புப் பகுதியெங்கும்
பொஸ்பரஸ் குண்டுகள்
வித்துக்களாய் விழுந்து வெடிக்கிறது

வாணவேடிக்கை பார்க்க
வாசலுக்கு வந்த குழந்தைகள்
கொத்துக் கொத்தாய் செத்து மடிகிறது

கொஞ்சி விளையாடும் பிஞ்சுக் குழந்தைகள்
வஞ்சகர்களின் குண்டு பட்டு
வலுவிழந்து போகிறது

கீலம் கீலமாய்
கிழிந்து போன உடல்களை
சேர்த்தெடுத்துக் கொண்டு
மருத்துவத்திற்காய் மன்றாடுகிறார்கள்
கவனிக்க யாருமில்லை
ஒவ்வொன்றாய் இறந்து போகிறது

தாயொருத்தி
தன் குழந்தையின்
தலையை மட்டும் சுமந்து கொண்டு
தள்ளாடி வருகிறாள்
அவளிடம்
ஒரு துளியும் உணர்ச்சியை காணமுடியவில்லை.
பித்துப்பிடித்தவளாய்.. நானும்.

இப்படித்தான்
அத்தனை பேரும் அங்குள்ள நிலையும்

குண்டுகள்
எப்போது விழும், எங்கே விழும்
எதுவுமே தெரியாமல்
பொந்துக்குள் பலர் புதைந்து கிடக்கிறார்கள்.

கண்களில் நீர் வடிய
கனத்த இதயத்தோடு
அண்ணார்ந்து பார்க்கிறேன்

குண்டுகள் பட்டு
உயர்ந்த கட்டிடங்கள் ஒவ்வொன்றாய்
இடிந்து விழுகிறது
அதன்
இடிபாடுகளுக்குள் சிக்கிய உடல்கள்
சிறைபட்டுக் கிடக்கிறது.

ஊண் இல்லை. உறக்கமில்லை
உடுப்பதற்கு
ஒழுங்கான ஆடையில்லை
உதவிக்கு வர ஒருவருமில்லை
மொத்தத்தில்
உணர்விழந்த ஒரு சமூகத்தை
நான்
சிரியாவிலே சிறைபிடித்துக் கொள்கிறேன்.

சரியா, தவறா என்று சரி பார்ப்பதற்குள்
சரமாரியாக
குண்டுமழை பொழிகிறது
வாழை மரம் போல்
ஒரு வம்சமே சரிந்து விழுகிறது

ஆறுதல் சொல்ல யாருமில்லை
அடுத்தகனம்
என் இறக்கைகளை
இறக்கி வைத்து விட்டு
நானும்
சிரியா மக்களோடு சேர்ந்து கொள்கிறேன்
ஒரு புனித யுத்தத்திற்காக..

இறைவா உன்னிடம்
இருகரமேந்திக் கேட்கிறோம்
அபாபில் பறவை கொண்டு
அநியாயக்காரர்களை அழித்தவன் நீ
எதிரிகளை அழித்து விடு எம் உறவுளை காத்து விடு.
அவர்களையும் வாழ விடு...

நன்றியுடன்
காத்தான்குடியிலிருந்து - மதியன்பன்
01.03.2018