24 March 2013

ஆலமரத்தின் ஆணிவேரு..........


சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அகால மரணத்தை யொட்டி நடைபெற்ற இரங்கல்கூட்டத்தில் பாடிய கவிதை.

 – மதியன்பன் -

முஸ்லிம் இனத்தின் முளுமதியே
அமைச்சர் அஷ்ரப்
உங்களின் இறப்புச் செய்தி
எங்களின்
காதுவழியாக சென்று
கண்கள் வழியாக
வெளியே வந்தது.


அது பொய்யாக இருக்காதா..
என்றுகூட
எங்கள் மனம்
ஏற்றுக் கொள்ள மறுத்தது.

ஆனாலும்
நீங்கள்
மரணித்துப் போனதாக
மற்றவர்கள் சொன்னபோது
உடனடியாக
எங்களால்
உறுதிப்படுத்த முடியவில்லை.

மர்ஹூம் அமைச்சரே...
உங்களின் துடிப்பும், படிப்பும்
தூய பண்பும்
எங்கள் இதயங்களில்
இன்னும்
பசுமரத்தாணியாய்
பதிந்து நிற்கிறது.

உங்கள்
சேவையின் சிகரமாய்
ஒலுவில் துறைமுகமும்
பல்கலைக்கழகமும்
இன்னும்
அறைகூவி நிற்கின்றன.

இலங்கையின்
இனப்பிரச்சனைத்தீர்வில்
நிங்கள்
இதயம்போல் இருந்தீர்கள்
அரசாங்கத்திற்கே
ஆலோசனை சொன்னவர் நீங்கள்.

அமைச்சரே..
உங்களின்
இறுதிப் பேச்சும்,மூச்சும்
நடவடிக்கை அத்தனையும்
இறப்புக்கு
வரவேற்புக் கொடுத்ததுபோல்
வடிவாய் அமைந்தன.

நீங்கள்
மக்காவில் வைத்து
வானொலியில்
சொன்ன வார்த்தைகள்
இன்னுமெங்கள்
செவிகளில்
இரைந்து கொண்டே இருக்கிறது.

நீங்கள்
கட்டளைகளைப்
பிறப்பகிக்கும் போதெல்லாம்
கர்ஜனை செய்வீர்கள்
அவை
அதிகாரத்தின் ஆணவமல்ல
ஆளுமையின் அவசியமென்று
பின்புதான்
புரிந்து கொண்டோம்.

அமைச்சரே..
நீங்கள்
மெதுமையானவர் மட்டுமல்ல
புதுமையானவரும்கூட..
பாராளுமன்றத்தில்
நீங்கள்
பணியாற்றியபோது
சீரான சமூகத்தை
எங்களுக்கு
செதுக்கித் தந்தீர்கள்.

அமைச்சரே..
உண்மையைச் சொன்னால்
உங்களிதயம்
விசாலத்தில் விரிந்தது.
காரணம்
குடியிருப்போர் தொகையை
எங்களால்
கூட்டிப்பார்க் முடியவில்லை.

நீங்கள்
எழுந்து வரமாட்டீர்களா..
என்று கூட
எங்கள் இதயங்கள்
இன்னுமின்னும்
ஏங்கிக் கொண்டிருக்கின்றன.....
நல்ல பண்டங்கள்
கடைகளில்
நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை.
அமைச்சர் அவர்களே
உங்கள் முடிவும் அப்படித்தானா...?

நீங்கள்
கிழக்கின்
சூரியனாய் வந்து
சுடர் தந்தீர்கள்
விளக்காய் விழித்திருந்து
வேலை செய்தீர்கள்.

உங்களை நாம்
குணத்திலே
குன்றாகக் கண்டோம்.
பாசத்திலே
பரிதியாகப் பார்த்தோம்.
நட்பிலே
பெட்பாக நோக்கினோம்.
சேவையில்
செம்மலாகக் கொண்டோம்.

உங்கள் உள்ளம்
முற்றத்து மல்லிகை போல்
வெள்ளை யென்பதை
நாங்கள்
பின்னர்தான்
விளங்கிக் கொண்டோம்.

அமைச்சர் அவர்களே..
உங்கள்பணி
காத்தான்குடியிலும்
காலூன்றி நின்றது.

நாங்கள்
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை
பெற்றுக் கொள்வதற்கு
பிரியப்பட்டவர் நீங்கள்.

எங்களு}ரின்
இரண்டு குத்பாக்களை
ஒன்றாக்கி
ஒற்றுமைக்கு
வித்திட்டவர் நீங்கள்.

அடுத்த சமூகங்கள்
ஐம்பது வருடங்களுக்குள்
ஆற்ற முடியாதவற்றை
பணிகளைக்கூட
ஐந்து வருடங்களுக்குள்
ஆற்றி முடித்தீர்கள்.

No comments:

Post a Comment