23 April 2014

தண்ணீரைத் தாண்டிய தேசம்

மதியன்பன்


தண்ணீரைத்
தாண்டிய இடமா..
தப்பிக்க வழி இல்லையா..
சப்பித் துப்புவார்களா..
எங்களை
இரை போட்டு இழுத்தெடுப்பார்களா..?

இதையெல்லாம் கேட்டபோது
வேடிக்கைப் பேச்சென்று
விலகிக் கொண்டன
சிலமீன்கள்..


ஆட்டம், பாட்டம், கூத்துயென
கூடிக் கொண்டு
கும்மாளம் போட்டன அவை..

நம்பிய மீன்களோ
நடுக்கடலில்
நடுநடுங்கிப் போயின..

திடீரென
தண்ணீருக்குள்
தலைகாட்டின இரையொன்று..
மீன் கூட்டமொன்று
மெய்மறந்து மொய்த்தன..

வாய்வைத்த மீன்
வசமாக மாட்டிக் கொண்டது.
மீனவன்
வெளியில் இழுத்த போதுதான்
விளங்கியது
தண்ணீர் கடந்த தேசம் இருப்பது...

அறுத்து உரித்து
எண்ணையில் போட்டு
வறுத் தெடுத்த போதுதான்..

வேறு தேசம் இருப்பதும்
வேதைனை கிடைப்பதும்
வாழ்வு
நிலையல்ல என்பதும் நிதர்சனமானது.
வெளி உலகில்
நடந்த விடயங்களையும்
பெருந்தீயில்
எலும்பு தோல் சதையெல்லாம்
கருகி
உருகிப் போவதையும்

வாழும் மீன்களிடம்
சொல்ல முடியாமல்
வாய்விட்டழுகிறது
அங்கே
வசமாக மாட்டிக் கொண்ட மீன்.!

இங்கே..
........?
23.04.2014

No comments:

Post a Comment