22 April 2014

புலிகளில்லா தேசத்தில் எலிகளுக்கென்னவேலை..?

மதியன்பன்


புலிகளின்
கல்லறைகளில்
இப்போதெல்லாம்
புற்கள்கூட முளைப்பதில்லை..

இது
புலிகள் இல்லாத தேசம்
இப்போது
எலிகள் ஏக்காளமிடுகிறது..!


தவளைகளின் சத்தம்
தண்ணீர்
வற்றும் வரைதான்
நீர் வற்றினால்
நின்றுவிடும் எல்லாமே..!

வீரர்களெல்லாம்
விலாசமில்லாமல் போனார்கள்.
இங்கே
தேரர்கள் சிலர்
தேவையில்லாமல்
தேக்கு மரம் ஏறுகிறார்கள்..

அது
தேக்கல்ல..
சறுக்கு மரம் என்பதை
சற்றுத் தூரத்தில்
கண்டு கொள்வார்கள்.

பொறுத்திருங்கள்
உங்களை ஓரங்கட்ட
ஒருவனாவது உதயமாவான்
இதயமுள்ளவனும்
ஈமானுள்ளவனும்
இன்னும் இல்லாமலில்லை..

இதயங்களை
புரட்டி வைப்பவன் அல்லாஹ்..!
கண்முன்னே
இரு தலைவர்களைப் பிரித்து வைத்து
இயக்கத்தைiயே
இல்லாமல் செய்தவன் அவன்..!

வளர்த்த கடா
நெஞ்சில் பாய்ந்தது வரலாறு.
இது உங்களுக்கு...
பிர்அவ்னின் கொட்டமடக்க
மூஸா நபி
அவனிடமே வளர்ந்தார்கள்
இது அவர்களுக்கு..

இறுதியாக..
வளைந்து கொடுக்கும்
வாழை மரத்தில்தான்
வசமாக மாட்டிக் கொள்கிறது
மரங் கொத்திப் பறவை..!

22.04.2014



No comments:

Post a Comment