1996 ஆம் ஆண்டு புத்தளத்தில் நடைபெற்ற புனித தப்லீக் இஜ்திமாவுக்குச் சென்று வந்து எழுதிய கவிதை.
-மதியன்பன்-
புத்தள நகரத்தில்
ஒரு
புனித புத்தாண்டு.
இஸ்லாமிய இதயங்களுக்கு
இது
மூன்றாவது பெருநாள்.
தப்லீக் ஜமாஅத்தின்
தனித்துவம் காத்த
இஜ்திமா மைதானம்.
இங்குதான்
புனித இஸ்லாத்தைப் பரப்பிடும்.
புனித ஜமாஅத்துக்கள்.
இங்கே
ஐந்து இலட்சம் மக்கள்
அருகருகே நின்று
அல்லாஹ்வை வணங்கிட்ட
அந்த
அற்புதக் காட்சி.
இக்காட்சிகளைக்
காணாத கண்கள்
வெறும் புண்கள்.
அங்காற்றிய
அரிய உரைகளைக்
கேட்காத காதுகள்
வெறும் கோதுகள்.
குடிநீரும் குளி நீரும்
கொஞ்சம் கஸ்டம்தான்.
ஆனால்
ஏற்பாடுகள் ஏராளம்.
இவை
மனிதர்கள் ஏற்பாடா..?
அல்லது
மலக்குகள் ஏற்பாடா
என
ஒருகனம்
காண்போரை
கலங்க வைத்தது.
அங்கே
புண்பட்ட இதயங்களும்
பண்பட்ட இதயங்களும்
பாசத்தை
பரிமாறிக் கொண்டன.
அங்கே
அருகருகே குளமிருந்தும்
ஒரு
நுளம்பு கூட நுளையவில்லை.
கொட்டிய கழிவுகளை
அங்கே
எட்டிப் பார்க்கக்கூட
எந்த நாய்களும்
இருக்கவில்லை.
கேட்கின்ற மொழிகளெல்லாம்
ஈமானோடு
இரண்டறக் கலந்தன.
ஐந்து இலட்சம் மக்களுக்கு
அங்கே
கழிவறைகள்.
அவைகள்
வெளியறைகளாய்
வேறாகி நின்றன.
கழிவறைகளுக்குச் செல்ல
அங்கே
தண்ணீர் சுமந்து கொடுக்கும்
தளபதிகள்.
அவர்கள் மொழிந்த
அந்த
இனிய வாக்கியங்கள்
ஈமானை
இதயத்திற்கு
இழுத்து வந்தன.
காணாமல்
போன பொருட்கள்
அங்கே
காட்சிப் பொருட்களாய்
காணமுடிந்தது.
கண்டெடுத்தோர் ஒப்படைக்க
காரியாலயம் வேறு.
உரியவர் வந்து
உடமைகளைப்
பெற்றுச் செல்லும்
உயர்ந்த பண்பை
அங்குதான்
அவதானிக்க முடிந்தது.
நாற்புறமும் கழிவுகள்
இருந்தும்
ஒரு கொசுக்கூட
அங்கே
உட்கார வரவில்லை.
கழிவுகளைத் திண்பதற்கு
அங்கே
காக்கை இனம் கூட
காணக் கிடைக்கவில்லை.
இவை தவிர-
கைகலப்பு, கருத்து மோதல்
முரண்பாடு, முகம் சுழித்தல்
இன்னோரன்ன
குறைபாடொன்றும்
கூறவும் முடியவில்லை.
வைத்திய சாலை யொன்று
அங்கே
நோயாளிகளின்றி
நொந்து போய்க் கிடந்தது.
தீயணைக்கும் கருவிகள்
அங்கே
தேவையற்றுத்
தேங்கிக் கிடந்தன.
மின்விளக்குகள்
அந்த
மைதானமெங்கும்
விண் விளக்குகளாய்
வெளிச்சமூட்டின.
பார்க்கின்ற இடமெல்லாம்
பக்திப் பரவசம்.
நோக்கின்ற திசையெல்லாம்
நுழைகின்ற மக்கள்.
சுருக்கமாகச் சொன்னால்
அங்கே
அறபா மைதானத்தில்
ஐந்து இலட்சம் பேர்
ஓன்று சேர்ந்தது போல்
ஓர்
உணர்வு வந்தது.
No comments:
Post a Comment