24 March 2013

உனது பேனா இனி எதை எழுதும்..?


 – மதியன்பன்-

என் இனிய தோழனே!
இனி நீ –
எதை எழுதப் போகிறாய்!
தியாகத் திருநாளில்
நீயுமொரு
தீர்க்கமான முடிவெடு!


கனவில் வந்து
கட்டித் தழுவி முத்தம் தரும்
காதலிக்கொரு
கவிதை எழுதப் போகிறாயா..?
அல்லது-
சீதனக் கொடுமையினால்
சீரழிந்த குமருகள்
சிந்துகின்ற  கண்ணீருக்கு
விடை எழுதப் போகிறாயா..?

உழைத்துழைத்து ஓடாகி
உருக்குலைந்த ஏழைகள்
உலர்த்துகின்ற
வியர்வையின் விளைச்சலுக்கு
விடை எழுதப்போகிறாயா..?

ஒரு வேளை உணவுக்கும்
உடல் மறைக்கும் ஆடைக்கும்
தெருவோரம்
தேசத்துத் தாய்மார்கள்
தேம்பியளும் காட்சிக்கு
விடை எழுதப்போகிறாயா,?

ஈமானிய  இளைஞனே!
எத்தனையோ கிராமங்கள்
இன்னும்
இத்தாவுக்குள் இருக்கின்றன.
முஸ்லிம்கள்
முக்காட்டுக்குள்
முகாமிட்டிருக்கிறார்கள்

சொத்தில்லை! சுகமில்லை
சொந்தமும் இல்லை
அலை மோதும் நிலையாகி
நம்
உறவுகள் இங்கே
அறுபட்ட ஆடுகளாய்...
எதை எழுதப் போகிறாய்..?

இஸ்லாம் இன்று
நம்மவருக்கு
இரண்டாம் தாரமாய்
இணைக்கப்பட்டிருக்கிறது

ஹதீதுகளைச் சொன்னால்
சிலருக்கு
கணிதப் பாடம்போல்
கசப்பாக இருக்கிறது.
குர்ஆனைச் சிலர்
இன்று
மரண வீடுகளுக்காகவே
மனப் பாடம்
செய்து வைத்துள்ளார்கள்.
எதை எழுதப் போகிறாய்.?

குர்ஆனை கரைத்தெடுத்து
குளிர்பானமாக்கி
இன்று சிலர்
குளிப்பதற்கும் , குடிப்பதற்கும்
சட்டம் வகுத்துள்ளார்கள்

நோன்பு வந்தால்தான்
சிலரிடத்தில்
தொப்பிகளும்;, தஸ்பீஹூம்
தூசி தட்டப்படும்
எதை எழுதப் போகிறாய்.?

ஆயுதக் கலாச்சாரம்
நம்மை
அழித்துக் கொண்டிருக்கிறது
நாமின்னும்
வெள்ளைப் பிடவைக்கும்
பேரீத்தம் பழத்திற்கும்
விலை பேசிக் கொண்டிருக்கிறோம்.
பள்ளிகளுக்குள் பார்த்தாயா..?
கஞ்சிப் பானைகளும்,
சோத்துப் பெட்டிகளும்
நம்மை
சுகம் விசாரிக்கின்றன.
உலக சவால்களுக்கு
இவை
உதவும் கரங்களா என்ன..?

நாமின்னும்
கம்புக்கும் கபுறுக்கும் மண்கூட்டி
கடலுக்கும் சோறூட்டி
கடமை செய்து கொண்டிருக்கிறோம்.
எதை எழுதப் போகிறாய்.?

குழந்தைகளைக் கொஞ்சம்
குசலம் விசாரித்துப்பார்
நடிகர்களின் நாமத்தை
நமக்கு
மனப்பாடம் சொல்லித்தரும்.

நபிகள் நாயகத்தை
மொழிய முடியாத மழழைகூட
இன்று
வணக்கம் தாயகத்தை
வாய் நிறையச் சொல்கிறது
நம்மவர் சக்தியெல்லாம்
சக்தியின்
காதலர் நேரத்தோடு
கரைந்து போகிறது.
எதை எழுதப் போகிறாய்.?

திறந்துபார் வானொலியை
குடும்ப விருப்பமாய்
நமது
குமருகளின் நாமங்கள்தான்
பாத்திமா, பர்சானா.
பஸ்மியா என்றெல்லாம்
பட்டியல் விரிகிறது.
கட்டில் சமாச்சாரமெல்லாம்
காற்றோடு கலந்து போகிறது.
தொலைக் காட்சி நிகழ்ச்சிக்கு
நமக்கு
நேரசூசி தேவையில்லை
பள்ளிச் சிறார்கள்
அதற்கு
பாடம் சொல்லித் தருவார்கள்.

பானைக்குள் அரிசியில்லை
நமது பெண்களுக்கு
அதுபற்றிக் கவலையுமில்லை!
அரசி நாடகம்
இல்லையென்றால்
இரவில் தூக்கமே இல்லை
எதை எழுதப் போகிறாய்.?

இன்று
சுவர்ணவாஹினி
நம் இளசுகளுக்கு
சுவர்க்க வாஹினியாய்
சுகம் கொடுக்கிறது.

திருமறையும், நபியுரையும்
நமக்கு
வழிகாட்டுமென்ற
வள்ளல் நபி வாக்கிருக்க
இன்று
கிரிகெட்டும்;, ரீவியும்
வழி காட்டிக் கொண்டிருக்கிறது.
எதை எழுதப் போகிறாய்.?

தினமுரசின்;;;;;;
நடுப்பக்கத்திலும்
நடுப்பக்கம் பார்க்கின்றவர் நாம்.
இவை
இளசுகளுக்கு மட்டுமல்ல
கிழடுகளுக்கும்
கிளுகிளுப் பூட்டுகிறது.
ஜனனி , மித்திரன்
ரோஜா இதழ்கள்தான்
நம் இளசுகளுக்கு
இதயத்துடிப்பாக இருக்கிறது.
சக்தியில்லை யென்றால்
நம்மவர்க்கு
எதிலும் சக்தியில்லை.
எதை எழுதப் போகிறாய்.?

இளையவர்களின்
இஸ்லாம் எங்கே?
அவர்களது செல்போனின்
இன் பொக்ஸ் மற்றும் அவுட் பொக்ஸ்
திறந்து பார்
தெரிந்து விடும்!

மாண்டு போன
மனிதம் இங்கே
மீண்டு வரவேண்டும்!
இவை மாற
உனது பேனா எழுத வேண்டும்

இலையுதிர் காலம்
இப்போ
கொலையுதிர் காலமாய்
மாறிப் போச்சி
கலை கலாச்சாரமெல்லாம்
கொலை விபச்சாரமாய்
கூடிப் போச்சி
இவை மாற
உனது பேனா எழுத வேண்டும்

கொலை கொள்ளை
கற்பழிப்பு ஆட்கடத்தல்
இப்படி
தொடர்ந்து வரும் துன்பங்கள்
நம்மினம்
அடைந்து வரும் இன்னல்கள்
இவை மாற
உனது பேனா எழுத வேண்டும்

போதை வஸ்துப் பாவனையால்
நம் சமூகம்
புதை குழுp நோக்கி
புறப்பட்டுச் செல்கிறது

புனித மறை திருகுர்ஆன்
இன்று
புல்லுருவிகளின் கையில்பட்டு
பொசுங்கிப் போகிறது
நம் மனசு
நசுங்கிப் போகிறது
இவை மாற
உனது பேனா எழுத வேண்டும்

எதை
எழுதப் போகிறாய்
இன்றே சபதம் எடுத்துக் கொள்!

No comments:

Post a Comment