புதிய காத்தான்குடி விஸ்டம் இளைஞர் கழகத்தினால் திறந்து வைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவில் பாடிய கவிதை.
காலம் - 29-08-1997
– மதியன்பன்-
நூலகத்தின் சிறப்புப் பற்றி
ஒரு சின்னக்கவிதை
சொல்லி
விடை பெற விழைகிறேன்.
இன்று
வரலாற்றுப் புத்தகத்தில்
ஒரு
வஸந்த நாள்.
நூலகம் திறப்பு விழா.
அதனால்
சிறைச்சாலையொன்று
மூடு விழா.
நல்ல நூற்கள்
நமக்கு
நல்ல நண்பர்கள்.
அப்பளம் பொரிக்கும்
அந்த
அனல் தெறிக்கும்
பாலை வனத்தில்
நீரூற்றுப் போல்
வரண்ட இதயங்களுக்கு
நூலகம்
ஒரு வரப்பிரசாதம்.
விஞ்ஞான யுகத்தில்
நூலகம்
ஒரு விளை நிலம்.
மாக்களை
மக்களாக்கிய
ஒரு மகா கூடம்.
நூலகம்
ஒரு
நந்தவனச் சோலை
அதற்குள் நாம்
நடமாடப் போகிறோம்.
நூலகம்
ஒரு
ஆழிய ஆழி
அதற்குள் நாம்
அளவில்லா முத்துக்களை
அள்ளப் போகிறோம்.
வெள்ளத்தால் அழியாத
வெந்தனலால் வேகாத
கள்வரால்
கவர்ந்திட முடியாத
அள்ள அள்ளக் குறையாத
அந்த
அமுத சுரபியை
நூலகத்துள் நாம்
பருகப் போகிறோம்.
நுலகம்
ஒரு
காதல் குடும்பம்
அதற்குள் நாம்
விரும்பியவர்களைக்
காதலிக்கப் போகிறோம்.
விஸ்டம் அணியின்
இந்த
தூய பணி சிறக்க
வாழ்த்துக் கூறி
விடை பெறுகிறேன்.
No comments:
Post a Comment