விடுதலை விரும்பிகளின் துப்பாக்கி வேட்டுக்குப் பலியாகிப்போன காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தின ஆசிரியர் ஸூபைர் அவர்களின் நினைவாக எழுதப்பட்ட கவிதை.
-மதியன்பன்-
இறப்பிலும் வாழும் இளம் பிறை
இறப்பிலும் வாழும்
இளம்பிறையே ஸூபைர்
உங்களிளப்பினால்
இன்னுமெங்கள்
இதயங்கள்
இரத்தம் வடிக்கின்றன.
கோரப்புலிகளின்
குண்டுகளுக்குப்
பலியாகிப் போன
எங்கள்
பாசத்தின் பிறப்பிடமே
நீங்கள்
குணத்திலே குன்று.
உங்களால்தான்
காத்தான்குடியின்
கல்வித்தரம்
காலூன்றி நின்றது.
நீங்கள்
மகாவித்தியாலயத்தின்
மகாத்மா...!
நீங்கள்
கணக்குப் பாடத்தில்
கவனமெடுத்ததால்
கணக்கில்லா இதயங்களை
கவர்ந்து கொண்டீர்கள்.
உங்களின்
பன்னிரண்டு வருட
பள்ளிச்சேவை
மாணவர்கள் மத்தியில்
ஒரு
மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தது.
நீங்கள்
அன்புக்கு அணிகலன்
அடங்காத மாணவர்களையும்
அன்பினால்
அடக்கி ஆண்டீர்கள்.
நீங்கள்
நடந்து வந்தால்
மைதானத்தின்
புற்கள் கூடச் சாகாது.
மெதுமையானவர்
மட்டுமல்ல
புதுமையானவரும் கூட.
உங்களைப்போல்
உங்களது வார்த்தைகளும்
மெதுமையானவை.
கசப்பாக இருப்பினும்
நீங்கள்
உண்மையை உரைப்பதில்
உறுதியாக இருந்தீர்கள்.
யாருக்கும்
அடிபணியாத சுபாவத்தை
சுமந்து நின்றீர்கள்
அதனால்தான்
துப்பாக்கிக் குண்டைக்கூட
நீங்கள்
தோளில்
சுமந்து கொண்டீர்கள்.
அந்தப் பாவிகள்
எங்களது
கல்விக் கண்ணையும்
கருணைக் கண்ணையும்
ஒரே நேரத்தில்
உறுஞ்சிக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment