24 March 2013

வஸந்தப் பிரசவம்



புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நமது சமூக வானொலி றிஸாலாவில்;; ஒலிபரப்பான கவியரங்கில் பாடிய கவிதை.
நாள் - 13-10-2007 சனிக்கிழமை
தலைமை - கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கான்

 – மதியன்பன் -

புல்லுக்குள் நெளிகின்ற புழுவின் குரலை
புரிந்தன்னம் ஊட்டுகின்ற அல்லாஹ்- கரிய
கல்லுக்குள் வாழுகின்ற தேரைகட்கும்
கருத்தோடு உணவுதனை ஊட்டும் அல்லாஹ்- எந்தன்
சொல்லுக்கு உரமூட்டு சுவையாக்கு
அல்ஹம்து லில்லாஹ்


பிரசவங்கள் என்றாலே
பெரும் பிரச்சனைதான்
ஆனால்
சுகப்பிரசவம் என்பதனால்
சோர்ந்து விடவில்லை
சுகமாக இருக்கிறது

இன்று
ஒரு தாயின் சுகப்பிரசவம்
முப்பது நாட்கள்
நோன்பிருந்து
முழுமையாய் தியாகம் செய்து
வெற்றிபெற்ற தாயின்
வீரப்பிரசவம்
அதுதான்
ஈதுல் பித்ர் எனும்
ஈகைப் பிரசவம்

ஒவ்வொரு மாதமும்
வானத்தில்
வளர்பிறை வருகிறது
ஆனால்
ரமளான் மாதத்தின் தலைப்பிறை
ஒரு
ரம்யத்தை சுமந்து வந்தது.

ரமளான் மாதம்
நம்மிடத்தில்
விருந்தாளியாய் வந்து
விடைபெற்றுச் சென்றது

விருந்தாளிகள் விடைபெற்றால்
விருப்பம் வருவதுண்டு
ஆனால்
ரமளான் பிரிந்தபோது
நமக்குள்
ரணங்களே சொந்தமாகின

இந்தமாதம்
இன்றோடு எமைவிட்டு
பிரிந்து போகிறது
அதனால் எமதுள்ளம்
எரிந்து போகிறது

இந்த மாதம்
வணக்கத்தை மட்டும்
நமக்கு
வரையறுத்துச் சொல்ல வில்லை
மாறாக
ஏராளமான பாடங்களை
எத்திவைத்துச் சென்றது.

பாடங்கள்
படிப்பதற்கு மட்டுமல்ல
அது
வாழ்க்கைக்கு
வழித்துணையாக வரவேண்டும்.

ரமளான் பிறையின்
ஒளிக்கீற்று
நம் விரல்களில் வெட்டுண்ட
நகத்தைப்போல
காட்சி தந்தது
ஆனால்
சதையைப்போல
ஒட்டிக் கொண்டது.

ரமளான் பிறையைப் பலர்
தங்களது
வாழ்க்கைத் துணையாய்
வரவேற்றுக் கொண்டார்கள்
இன்னும் சிலர்
கூடாரமடித்து
அதனோடு
குடியமர்ந்து கொண்டார்கள்

அதனால்
இந்த மாதம்
மாதங்களில் மகாராணியானது
கல்நெஞ்சங்களையும்
இந்தமாதம் கரையவைத்தது.

மனித மனங்களை
மாற்றுவேன் என்று
சவால்விட்டு வந்த
சாத்தான்களுக்கு
விலங்கிடப்பட்ட
வித்தியாசமான மாதமிது

அனல் தெறிக்கும்
அகோரத்திலும்
நல்ல உள்ளங்களை
நனையவைத்து குளிர வைத்து
நாவுக்கு சுவையூட்டிய
நட்புக்குரிய மாதமிது

இல்லாத ஏழைகளும்
இருப்பதைக் கொண்டு
இளைப்பாறும்
இனிய மாதமிது

இந்த மாதம்
இரவைப் பகலாக்கி
இறையை வணங்க வைத்தது
பிரிந்திருந்த
இரத்த உறவுகளை
இணங்கவைத்தது.

வானத்திலுள்ள
விண்மீன்கள் மட்டுமல்ல
நமது வீட்டிலுள்ள
ஆனத்து மீன்கள் கூட
ஆமீன் சொன்ன
அற்புத மாதமிது

மலைபோல் குவிந்திருந்த
மானுடத்தின்
பாவமூட்டைகள்
ரமளான் மாதத்தின் வருகையால்
பகலவன் கண்ட
பனித்துளிகளாய்
பறந்து போயின.

இந்த மாதத்தில்
ஓரிரவு
ஒளிந்து கொண்டது
அது
புனிதத்தைப் போர்த்திக் கொண்டதால்
லைலத்துல் கத்ர் எனும
;ரகசியத்தை
சூசகமாய்ச்
சொல்லிச் சென்றது.

ஈமானிய இதயங்களின்
உடலுக்கும் உளத்திற்கும்
ஒத்தடம் போட்ட
ஒப்பற்ற மாதமிது
இந்த மாதத்தின்
நாட்களின் நகர்வுகள்
நமக்கு
நரகத்தை தூரமாக்கியது
சுவர்க்கத்தை
சொந்தமாக்கியது

இன்று நம் சமூகத்தின நிலையை
சற்று
சிந்தித்துப் பாருங்கள்

ஒரு வேளை
உணவுக்கு வழியின்றி
தெருவோரம் தேம்பியழும்
தாய்மார்களைப் பாருங்கள்.
சீதனக் கொடுமையால்
சிறையிருக்கும்
நம்குமர்கள் சிந்தும்
கண்ணீரைக் கொஞ்சம்
கண்திறந்து பாருங்கள்

அடிபட்ட பந்துகளாய்
அங்குமிங்கும்
அலைமோதித் திரியும்
நம்
அகதி மக்களின்
அவலநிலையைக் கொஞ்சம்
அவதானித்துப் பாருங்கள்

சுனாமி நிவாரணமாய்
பலருக்கு
சும்மா கிடைத்த வீடுகள்
இன்று
வெள்ளி, ஞாயிறு
விடுமுறை தினங்களில்
பிக்னிக் தளங்களாய்
மாறிப் போனதை
ஏறிவந்து பாருங்கள்

வட்டிக்குப் பணம் வாங்க
நம்இனப் பெண்கள்
வங்கிகளின் வாசல்களில்
வரிசையாய் நிற்பதைப் பாருங்கள்
நம்மிடத்தில்
பல்வேறு நிறுவனங்கள்
பலகோடி ரூபாய்கள்
உருப்படியாய்
ஒன்றேனும் உதவுமா?
உதவிக்கரம் நீட்டுமா?
என்பதைக் கொஞம்
எண்ணணிப் பாருங்கள்.

ஒற்றுமைப் படமாட்டோம்
என்பதில் மட்டும்
ஒற்றுமைப் பட்டிருக்கும்
நம் தலைவர்களின்
தயாள குணத்தைக் கொஞ்சம்
தள்ளி நின்று பாருங்கள்

பொதுப் பணமா?
புகுந்து விளையாடும் ஒரு கூட்டம்.
நீதி,நேர்மை,சத்தியம்
இவையெல்லாம்
செத்துப் போனதா?
அல்லது கைதிகயாகி
சிறையிலுள்ளதா?
சிந்தித்துப் பாருங்கள்.

நோன்புக்காய்
தூசுதட்டிய
குர்ஆன், தஸ்பீஹூ,முசல்லாக்கள்
இப்போது
பழைய இடங்கள் நோக்கி
பயணம் போவதைப் பாருங்கள்.

கத்தம், பாத்திஹா, மௌலீது
கபுறு வணக்க வழிபாடு
கைகட்டல், விரலசைத்தல்
இருபதா..?பதினொன்றா..?
இப்படி
இன்னோரன்ன பிரச்சனைகள்

நோன்பு சொன்ன பாடமெங்கே.?
நாம் நடாத்தும்
நாடகம் இங்கே!

பள்ளிக்குள் பிரச்சனை
பாடசாலை டியூட்டரிகள்
இன்னும்
பல்வேறு நிறுவனங்கள்
மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
சிக்கித் தவிக்கும்
சீர் கெட்ட நிலையைப் பாருங்கள்.

உள்வீட்டுப் பிரச்சனைகள்
நம்
உள்ளத்தை உடைத் தெடுக்க
சர்வதேச உம்மத்துக்கள்
தினமும்
சந்திக்கின்ற பிரச்சனைகள்

இவற்றை
சின்ன வார்த்தைகளுக்குள்
சிறைப்படுத்திவிட முடியாது.

அமெரிக்காவின் வெறித்தனம்
இன்று
ஈராக் மண்ணிலே
இரத்த ஆறு ஓடச் செய்கிறது
தனிமனித அதிகாரம்
இன்று
ஆப்கானிலே, பலஸ்தீனிலே
முஸ்லிம் உம்மத்துக்கள்
சிதறி வாழும்
சின்னச் சின்னத் தீவுகளில்
சித்திரைவதைக் கூடங்கள்
சில்லறைகளாய்
சிதறிக் கிடப்பதைப் பாருங்கள்.

யூதக் கறிஸ்தவர்களின்
வெறியாட்டத்திற்கு
துணைபோகின்ற
சில முஸ்லிம்
தலைமத்துவங்கள்
அவர்களின்
அடிவருடிகளாக
அடிமைகளாகிப் போன
அசிங்கத்தைப் பாருங்கள்

இனி வேண்டாம்
இந்த
இழிவான செயலெல்லாம்

ரமளான் நமக்கு
ரகசியமாய்ச் சொல்லிச் சென்ற
அமல்கள் நம் வாழ்வில்
இனிமேல்
அதிகரிக்க வேண்டும்.

இனி
வரும் ரமளான்
வருவதற்கு முன்பாக
நம்மிடம்
வரவேண்டும் மாற்றம்
அதில்
நாமும், நம் சமூகமும்
காணவேண்டும் ஏற்றம்

நன்றி. வஸ்ஸலாம்


No comments:

Post a Comment