இலங்கை தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மலேசியாவுக்குச்; சென்ற இலங்கை எழுத்தாளர்களுக்கு 26.05.2016 அன்று மலேசியா தமிழ் சங்கம் வழங்கிய பிரியாவிடை மற்றும் இரவு விருந்துபசார நிகழ்வின்போது எழுதி வாசிக்கப்பட்ட கவிதை
மதியன்பன் - இலங்கை
தலைவி ஹிதாயாவின்
தலைமையில்
தடாகத் தாமரைகள்
இப்போது
மலேசிய மண்ணில் மலர்ந்திருக்கிறது
இது
இரவின் இனிய வேளை
இலக்கியத்தால்
எல்லோரும் இணைந்த வேளை
மலேசியாவின்
எனது கவிதை
விருந்துக்குப் பின்
மருந்தாகட்டும்
சொந்த நாடு
வெள்ளத்தில் மூழ்கியிருக்க
உள்ளத்தில்
கவலைகளைச் சுமந்து கொண்டுதான்
கடடுநாயகாவில் கால் வைத்தோம்.
பாதங்கள்
மலேசிய மண்ணில் பட்ட போது
உங்களன்பு
எங்களிதயத்தைத் தொட்ட போது
கவலைகள்
மலேசிய விமானம் போல்
காற்றோடு
காணாமல் போயின.
நீங்களோ
புகழ்ச்சியாலும், மகிழ்ச்சியாலும்
ஏங்களை
பூரிக்க வைத்து விட்டீர்கள்
சோதனைகளும், வேதனைகளும்
எங்களுக்கு
சுகமாக இருக்கிறது
ஏனென்றால்
எங்கள் இதயங்களில்
நீங்கள்
இடம் பிடித்திருப்பதால்...
மலேசியாவின்
இரட்டைக் கோபுரம் போல்
உங்கள் இதயங்கள்
பண்பாலும், பரிவாலும்
உயர்ந்து நிற்கிறது
உங்களூரில்
உப்பு, எண்ணெய், உறைப்பு
இவையெல்லாம்
இல்லையென்பதால்
எங்கு தேடியும்
பாமசிகளைப் பார்க்க முடியவில்லை
மெழுகிலே வார்த்தெடுத்த
பொம்மைகளாய்
மலேசிய இளம் மாதர்கள்
இன்னுமெங்கள்
இதயத்தில் இடம் பிடித்து நிற்கிறார்கள்
அவர்களின்
மொழிகள் புரியாவிட்டாலும்
விழிகள்
பல விடயங்களை
விலாவாரியாக விளக்கி வைக்கிறது.
மலேசிய மக்களின்
சுறுசுறுப்பு
எங்களின் உறக்கத்தையும்
கொஞ்சம்
உசுப்பி விட்டிருக்கிறது
மலேசியாவின்
மலைகள், பாதைகளைப் போல்
உங்கள் மனங்களும்
விசாலமாக விரிந்திருக்கிறது
கிராமமொன்றைப் பார்ப்பதற்காய்
கிட்டத்தட்ட
ஐந்து நாட்கள் அலைந்திருக்கிறேன்
அடியேனால் முடியவில்லை
அபிவிருத்தியில் மலேசியா
உச்சத்தில் அல்ல
இப்போது
இமயத்தோடு இணைந்திருக்கிறது.
மலேசியாவெங்கும்
பசுமை
பாய் விரித்துப் படுத்திருக்கிறது
பார்க்கின்ற இடமெல்லாம்
புற்கள், பூக்கள், மரங்கள்
புல்லரித்துப் போகிறது மனசு
அழகென்னும் ஆடையை
அணிந்திருக்கிறாள்
மலேசியாவெனும் மாது
அதிலே
அழுக்குகளை
அவதானிக்க முடியவில்லை
சூழலை மாசுபடுத்தும்
சுவரொட்டிகள்
அரசியல் வாதிகளின்
அற்பத்தனமான தோற்றங்கள்
எதையும்
எங்கும் தேடியும் கிடைக்கவில்லை
வீதியோரங்களில்
கழிவுகளுமில்லை
அதனையுண்ண காக்கைகளும் இல்லை
இப்படி
ஏராளமாய்...
மலேசியாவின் மகத்துவம் பாடலாம்.
நேரமின்மையால்
நிறுத்திக் கொண்டவனாய்...
கடல் கடந்தாலும்
தமிழ் உறவு
உங்களையும், எங்களையும்
ஒன்று சேர வைத்திருக்கிறது
உறவுகளே!
நீங்கள் கொள்ளைக்காரர்கள்
எங்கள் இதயத்தை
கொள்ளையடித்துக் கொண்டதால்
நன்றிகள்
உங்களுக்கும்,
உடனிருக்கும் உறவு களுக்கும்
முடிவாக
பாடம் படித்தோம்
பட்டம் பெற்றோம்
உங்களன்பைச் சுமந்து கொண்டு
நாளை
இலங்கைக்கு இடம் பெயரப் போகிறோம்;
நன்றியுடன் - மதியன்பன்
26.05.216
No comments:
Post a Comment