01 May 2014

சாராய போத்தலும் சாப்பாட்டு பார்சலும்

(மதியன்பன்)


கொடிகள் பறக்கிறது
ஆங்காங்கு
கூட்டங்கள்  நிறைந்திருக்கிறது

அணிவகுப்பு மரியாதை
அர்த்தம் தெரியாத கோசங்கள்
ஊர்வலங்கள் -  என  
மேதினக் கூட்டங்கள்
மிகச் சிறப்பாய் நடக்கிறது


மேடைப் பேச்சுக்கள்
கோடை இடியாய்,
மின்னலாய் , மழையாய்
முழங்கி முற்றுப் பெறுகிறது

ஊடகங்களும்
உரைகளை உள்வாங்கிக் கொள்கிறது

கூட்டங்கள் முடிந்து
மக்கள்
குதூகலத்துடன் குடி பெயர்கிறார்கள்

தலைவர்களின்
பெஜ்ரோக்களும், பாத்பைன்டர்களும்
பறக்கிறது
பகல் உணவுக்கு...

இரவெல்லாம்
கொடிகளும், தோரணமும்
கூடுகளும் கட்டி
குற்றுயிராய் போனவர்கள்

தொழிலுக்குப் போகாமல்
லீவு போட்டு
ஊர்வலம் போனவர்கள்

சாராய போத்தலுக்கும்
சாப்பாட்டுப் பார்சலுக்கும்
சத்தியம் மறந்து
சோரம் போனவர்கள்

இப்படி
அக்கரையில்லாத
அத்தனை பேரும்
வீட்டுக்கு விரைகிறார்கள்

அம்மாவும்,
அவர்களை நம்பியிருக்கும்
அத்தனை ஜீவன்களும்
உணவில்லாமல்
உட்காந்திருக்கிறது
இந்த
உழைப்பாளர் தினத்தில்..

அடுத்த மேதினத்திற்கும்
சில அடிமைகள்
சிக்கத்தான் போகிறார்கள்..
இதே ஊர்வலமும் பேச்சுக்களும்
இடமாறியேனும்
நடக்கத்தான் போகிறது.

(அடியேன் 01.05.2014 இல் எழுதிய மேதினக் கவிதை மீள் பிரசுரம்)