24 March 2013

சரித்திரத்தைச் சரித்தவர்கள்


1996 ஆம் ஆண்டு வில்ஸ் உலகக் கிண்ணச் சுற்றுப் போட்டியில் இலங்கை கிரிகட் அணி வெற்றிபெற்று மாபெரும் சாதனை படைத்ததையிட்டு எழதப்பட்ட கவிதை இது.

– மதியன்பன்-                            

இலங்கை அணியினரே..
நீங்கள்
இந்த மண்ணின்
இணையில்லா இதயங்கள்.
உலகக் கோப்பையை
எங்களுக்கு
உரித்தாக்கித் தந்ததால்.


உங்களோடு
ஆடவந்தவர்களெல்லாம்
உங்களின்
ஆட்டம் கண்டு
ஆடிப்போனார்கள்
விளையாடிப் போனார்கள்.

அரவிந்த
உன்ஆட்டம்
கிரிகட் வரலாற்றின்
சரித்திரத்தையே
சரித்து விட்டது.
நீ
சதம் பெற்ற விதம்
இனி
சாகா வரம் பெற்றவை

ஜெயசூரிய
உன்
பெயருக்கு ஏற்றால்போல்
நம் அணி
ஜெயம் பெற
நீ
சூரியனாய் சுடர் தந்தாய்.
வீரியனாய்
வீசித் தள்ளினாய்.

ஓற்றுமைதான்
வெற்றிக்கு வழியென்று
செயலில் காட்டிய
செம்மல்கள் நீங்கள்.

அணித்தலைவா
அர்ஜூனா,
உன்கணிப்புகள்
கடைசி வரை பொய்த்ததில்லை.
ஆர்பரிப்பின்றி
அமைதியாய் நின்று
வெற்றிக்கு
விளக்கம் எழுதிவிட்டாய்.

நீங்கள்; ஓடியது
பிட்சை நோக்கியல்ல
வெற்றியின்
சிகரம் நோக்கி
என்பதை
எங்களால் விளங்க முடிந்தது.

உங்களோடு
ஆடிய அணிகளெல்லாம்
உங்களின்
வாகை கண்டு
வாடிய வதனத்தோடு
வெளியேறியது
வரலாற்றுக் குறிப்புத்தான்.

இலங்கை அணியினரே,
உங்கள் திறமைகளை
இதுவரை
எங்கே
ஒழித்து வைத்தீர்கள்..?
ஒருகணம்
உலகமே
உறுள மறுத்ததே..

இலங்கை அணியினரே,
உங்களை
கட்டித்தழுவி
பூமாலை சூட
நான் பக்கத்தில் இல்லை.
அதனால்தான்
தள்ளி நின்று
இப்போது
பாமாலை
சூட்டிப் பார்க்கிறேன்.

நாங்கள்
இலங்கையர்கள் என்று
இறுமாப்புக் கொள்வது
இப்போதுததான்
ஏனென்றால்
முழு உலகையும்
நீங்கள்
மூக்கின் மேல
விரல் வைக்க
வைத்து விட்டீர்கள்

No comments:

Post a Comment