24 March 2013

காதலித்தேன்


காத்தான்குடி பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச இலக்கிய விழாவில் பாடப்பட்ட கவிதை.
இடம் -      மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை  நாள் -10-08-1996

- மதியன்பன் -

காதலித்தேன்
மற்றவர்கள் மனம் பேதலிக்க
நான் காதலித்தேன்

ஒருத்தியைக் காதலிப்பது
உலக வழக்க மென்றால்                
நான்
ஒரு குடும்பத்தைக் காதலித்தவன்.
வித்தியாசமானவன்.
வினோதமானவன்.


காதலிக்காதவன்
வாழத் தகுதியில்லாதவன்
ஆதலினால்
நான் காதலித்தேன்.

சொல்லுங்கள
நீங்கள் காதலித்ததுண்டா..?
இல்லையென்றால்
வாருங்கள் காதலிப்போம்.

நான்,
மாமியையும், மகளையும்
ஓன்றாய்
மனதாறக் காதலித்தவன்.

ஓவ்வொரு நாளும்
நான்
ஓவ்வொரு காதலியுடன்
உரையாடி இருக்கிறேன்.
உறவாடி இருக்கிறேன்.
உணர்வு பெற்றிருக்கிறேன்.
உலகை மறந்திருக்கிறேன்
மாமியையும் மகளையும்
நான்
மனதாறக் காதலித்தேன்                    
மாமியை வைத்துக் கொண்டு
மகளோடு சுகம் கண்டேன்.
அடுத்தவளையும்
அருகிலே வைத்திருந்து
இளமையின் இதம் கண்டேன்.

மூத்தவளை
நான்
முத்தமிட்டபோதுதான்
என்னால்
முழு உலகையும்
முகரமுடிந்தது.

காதலிகளை
நான்
கதவோரம் நின்று
ரசித்திருக்கிறேன்
பின்னர்
உள்ளே சென்று
ருசித்திருக்கிறேன்.

நான்
கள்ளத்தனமாக
காதலிகளைக் கடத்தியிருக்கிறேன்.
அவர்களை
ஆங்காங்கு
கிடத்தியிருக்கிறேன்.
உண்மையைச் சொன்னால்
நான்
உலகைப் புரிந்து கொண்டது
அவர்களை
புணர்ந்து கொண்ட பின்னர்தான்.
என்னுடைய காதலை
இப்போது
இனம் காட்டுகின்றேன்

நான் காதலித்;தது
நூலகக் குடும்பத்தை
என்னுடைய காதலிகள்
புத்தகங்கள்
காதலர்களே,
நீங்களும் காதலியுங்கள்                
தோல்வியில்லாத காதல்
ஏமாற்றம் தராத காதல்
முன்னேற்றம் தரும் காதல்
இதுவே
முழுமையான காதல்

வயது
வேறுபாடின்றிக் காதலிக்கலாம்.
மொழி
வேறுபாடின்றிக் காதலிக்கலாம்.
இனம்
வேறுபாடின்றிக் காதலிக்கலாம்

பணம்,பதவி, பட்டம்
அழகு, அந்தஸ்த்து
இவைகளின்றிக் காதலிக்கலாம்.
;
காதலித்துப் பாருங்கள்
உலகம்
உங்களுக்குள்.
தூக்கம் வரும்
துணிவு வரும்
வாழ வேண்டுமென்ற
வைராக்கியம் வரும்.

இப்போது சொல்லுங்கள்.
நீங்கள் காதலித்தீர்களா.?
இலலை யென்றால்
வாருங்கள் காதலிப்போம்.

No comments:

Post a Comment