24 March 2013

காதிக் கோட்டில் காத்து நிற்கும் கல்யாணங்கள்!

 -மதியன்பன்-

அல்லாஹ்வின்
அருளே இல்லாமல்
ஆரங்கேறிய பல திருமணங்கள்
விரைவாகவே
விவாகரத்துப் பெற்றிருக்கின்றன.


அனுமதிக்கப்பட்டதும்
அல்லாஹ்வால்
வெறுக்கப்பட்டதும்
இந்த விவாகரத்துத்தான்.

நடக்கும் திருமணங்களைவிட
நடப்பிலிருக்கும்
விவாகரத்து வழக்குகளே ஏராளம்
காதிக்கோடுகளின்
கண்ணீர்க் கதைகளும் ஏராளம்.

மாடி வீட்டாசையில்
சிலர்
மதி மயங்கிப் போனதால்
மணமுடித்த சில மாதங்களில்
காதிக் கோட்டிலே காத்து நிற்கிறார்கள்

புருசனை
இத்தாவில் வைத்து விட்டு
மனைவி
ஜித்தாவுக்கு போனதாலும்
சில ஆண்களின் வாழ்க்கை
சீரழிந்து போய் இருக்கிறது.
கடைசியில்
காதிக்கோட்டில் காத்து நிற்கிகிறது.

பல குடும்பத்தில்
இளவயதுத் திருமணங்களும்
புரிந்து வாழத் தெரியாமல்
தலாக்குப் பெறுவதற்காக
தவணை கேட்டு நிற்கிறது.
போதைக்கு அடிமையாகி
இன்னும் சிலர்
பேதைகளுக்கும் அடிமையாகி
பெரும் பாவங்களைச் செய்வதால்
கல்யாணங்கள் பல
காதிக்கோட்டில் காத்து நிற்கிறது.

வறுமையை காரணம் சொல்லி
குடும்பம் நடாத்த முடியாமல்
சிலர் பொறுமை யிழந்து
தலாக் வேண்டுமென்று
தவணை கேட்டு நிற்கிறார்கள்.

பக்கத்து வீட்டுக் காரர்கள்
பகட்டாக வாழ்வதால்
அதைப்போல வாழவேண்டுமென்று
சிலர்
ஆசைப்பட்டுக் கொள்வதாலும்
கல்யாணங்கள் பல
காதிக்கோட்டில் காத்து நிற்கின்றன.

வரவுக்கு மீறிய செலவு
சிலரின் கழுத்துக்கு
கயிறாக மாறியதால்
மீளமுடியாமல் சிலர்
விவாகரத்துக்காக
விண்ணப்பித்து நிற்கிறார்கள்

தொழில் தொழில் என்று சிலர்
தூர இடங்களுக்குச் சென்று
கட்டிய மனைவியைக்
கண்டு கொள்ளாமல் இருப்பதால்
கல்யாணங்கள் பல
காதிக்கோட்டில் காத்து நிற்கின்றன.

சீதனம் என்னும் அந்த
சிறைக்குள்
சிக்கிய குடும்பங்கள் பல
வாழ முடியாமல்
காதிக்கோட்டில் இன்று
கண்ணீர் மல்க நிற்கிறது.

திருமணத்தை
தீர்மாணிக்கும்போதே
ஒவ்வொன்னும் தருவோம் என்று
ஒப்பந்தம் செய்துவிட்டு
பின்னர்
ஒன்றுமே கொடுக்காமல்
ஒதுங்கிப் போவதாலும்;
திருமணங்கள் பல
காதிக்கோட்டில் காத்து நிற்கிறது.

திருமணம் முடிந்து
சில காலம் சென்ற பின்னால்
வீட்டிலிருக்கும் பெற்றோரை
விரட்டுகின்ற விடயத்திலும்
பலதிருமணங்கள்
விவாகரத்தை வேண்டி நிற்கிறது.

அல்லாஹ்வை மறந்து
ஆடம்பரமாய் நடாத்தும்
கல்யாணங்கள் அனைத்தும்
காதிக் கோட்டுடன்தான் காலாவதியாகிறது.

(கருத்துக்களுக்குப் பொறுப்பு கவிதையாக்கியவனே)

எம்.எஸ்.ஏ.மஜீத் (மதியன்பன்)
077 6684848

No comments:

Post a Comment