24 March 2013

இறைவனின் கருணை என்றும் உனக்குண்டு !

காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கூறா சபை உறுப்பினருமான எமது சகோதரன் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கடந்த 20.05.2012 அன்று வாகன விபத்தில் காயமுற்றதையடுத்து அவருக்கு பூரண சுகம் வேண்டி எழுதப்பட்ட கவிதை)


 -மதியன்பன்-

இத்தனை வருடங்களில்
நீ அழுது நான் பார்த்ததில்லை
விபத்தின் பின்னால்
நெஞ்சிலே கைவைத்து
உள்ளே நோகுதென்று
வேதனைப் பட்டபோது
தாங்கமுடியாமல்
நானும் தள்ளாடிப் போனேன்


என்
இனிய சகோதரனே..!
நீ பயனித்த வாகனம்
விபத்துக்குள்ளானதாக
வெளிவந்த செய்திகேட்டு
உருக்குலைந்து போனவர்கள்
தேம்பித் தேம்பி அழுதே
வீங்கிப் போனார்கள்.

பொய்யாக இருக்கவேண்டும்
என்று
சொல்லிக் கொண்டுதான்
பலபேர் உனைப் பார்க்க
புறப்பட்டே வந்தார்கள்.

வாகனத்தைப் பார்த்தபோதே
வாய்விட்டழுதவர்கள்
வைத்திய சாலையில்
உனைப் பார்த்த பிறகுதான்
ஒருவாறு
உணர்வு பெற்றுக் கொண்டார்கள்
தர்மம்
தலை காக்கும் என்பார்கள்
அது உன்மை என்பதை
உறுதிப்படுத்திருக்கிறது
இந்த விபத்துச் சம்பவம்!

அல்லாஹ்வின் உதவியால்
அது உன்
உயிரையும் காப்பாற்றியிருக்கிறது

உன் கரத்தால்
பொருட் செல்வத்தையும்
உன் நிறுவனத்தால்
கல்விச் செல்வத்தையும்
வாரி வழங்கும்
பெரு வள்ளல் நீ..!

தர்மம் செய்வதில்
தாராள மனம் கொண்டவன்
அது
அல்லாஹ்வக்காக செய்வதென்று
நீ முகம் காட்டாமல்
பலமுறை
என்னிடம் தந்தே
ஏழைகளுக்குக்
கொடுக்கவைத்திருக்கிறாய்.

வந்தவர்களெல்லாம்
வாய்விட்டுச் சொன்ன பிறகுதான்
விபரமாய் எங்களால்
விளங்கிக் கொள்ள முடிந்தது.
எத்தனை இதயங்களில்
நீ இன்னும்
நிரந்தரமாய்
குடியிருக்கிறாய் என்று.

உனக்காகப் பிரார்த்திக்கும்
உள்ளங்கள் ஏராளம்!
நிரந்தர சுகத்தினை
நீ.. பெற வேண்டு மென்று
அப்பியாசக் கொப்பிகளை
அணைத்துக் கொண்டு
பிரார்த்தனை செய்யும்
தாய்மார்களையும்
என்னால்
தரிசிக்க முடிந்தது

ஒரு சொட்டு இரத்தம்
சிந்தாத
வித்தியாசமான விபத்தென்று
கனபேரிங்கே
கதைத்துக் கொள்கிறார்கள்.

உண்மைக்காக
நீ உழைத்ததெல்லாம்
தோற்றுப் போக வில்லை யென்பதை
நேற்றுத்தான்
நிதர்சனமாகக் கண்டு கொண்டேன்.

உன்னை விமர்சித்தவர்கள் கூட
அருகிலே வந்திருந்து
உனக்கு
ஆறுதல் சொன்னபோதும்
நீ தேற வேண்டுமென்று
தேம்பித்தேம்பி அழுத போதும்
கண்டவர் விழிகளெல்லாம்
கண்ணீரை
கரைய வைத்தது.

கற்கண்டை மொய்க்கும்
எறும்புக் கூட்டங்களாய்
உனைப் பார்ப்பதற்கு
படையெனத்
திரண்ட மக்களெல்லாம்
வெளியிலே நின்று கொண்டு
வேதனையைக் கக்கியது
கொழுத்தும் வெயிலைவிடவும்
கூடுதல் வெப்பம் தந்தது.

சத்தியத்திற்காய்
ஒரு
கூட்டத்தையே உருவாக்கியவன் நீ
உண்மையும் நேர்மையும்
எமையாள வேண்டு மென்று
இரவு பகலாய்
இடர்களை சந்தித்தவன் நீ
உன்னால்
இந்த சமூகம்
இன்னும் பயன்பெற வேண்டும்
வரும் துன்பங்களையெல்லாம்
இறைவன்
தூசிபோல்
துடைத்தெறிய வேண்டும்.

எல்லோர் பிராhத்தனையும்
உனக்கு
என்றும் இருக்கிறது
அல்லாஹ் உனக்கு
நீடிய வாழ்வையும்
நிரந்தர சுகத்தையும்
வழங்குவானாக..!
ஆமீன்!!!

எம்.எஸ்.ஏ.மஜீத் (மதியன்பன்)
077 6684848

No comments:

Post a Comment